ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதி: அக்டோபர் 22-இல் அடிக்கல் நாட்டு விழா
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதியில், அந்த மாநிலத்தின் புதிய தலைநகருக்கான அடிக்கல் நாட்டு விழா, வரும் அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர், ஜப்பான் நாட்டுப் பிரதமர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது ஆந்திர மாநில அமைச்சரவை.
இதுதொடர்பாக, புதன்கிழமை நடைபெற்ற ஆந்திர மாநில அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு மாநில தகவல், தொடர்புத் துறை அமைச்சர் ரகுநாத ரெட்டி கூறியதாவது:
விஜயதசமி நாளான வரும் அக்டோபர் 22-ஆம் தேதி, அமராவதி நகரில், புதிய தலைநகருக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. மேலும், ரூ.6,000 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதவிர, மின் திட்டங்களுக்கான எரிவாயு விநியோகத்துக்கு 14 சதவீத மதிப்புக் கூட்டு வரியை தள்ளுபடி செய்யவும், 250 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது," என்றார்.