சோட்டா ராஜனை சுழற்றியடிக்கக் காத்திருக்கும் அந்த 4 வழக்குகள்!
மும்பை: சோட்டா ராஜன் மீது 65 வழக்குகள் மலை போல குவிந்திருக்கலாம். எல்லாவற்றிலும் அவருக்குத் தண்டனை கிடைக்குமா என்பதும் சந்தேகம்தான். ஆனால் நிச்சயம் 4 வழக்குகளிலிருந்து அவரால் தப்ப முடியாது. அவை அவருக்குப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தலாம் என்று வக்கீல்கள் நம்புகிறார்கள், உறுதிபடக் கூறுகிறார்கள்.
மும்பையில்தான் முக்கால்வாசி வழக்குகள் போடப்பட்டுள்ளன. டெல்லியில் விரல் விட்டு எண்ணும் அளவிலான வழக்குகள்தான். எனவே மும்பையில்தான் சோட்டா ராஜன் முழுமையாக தங்க வைக்கப்பட்டு விசாரிக்கப்படவுள்ளார்.
சோட்டா ராஜனுக்கு 55 வயதாகி விட்டதால், அவரது வழக்குகளை விரைவாக விசாரித்து முடித்து தண்டனை அளிப்பதற்கு வசதியாக சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் நடவடிக்கையில் அரசுத் தரப்பு ஏற்கனவே இறங்கி விட்டதாகவும் சொல்கிறார்கள்.
65 வழக்குகள்
மும்பை போலீஸார் இதுகுறித்து ஒன்இந்தியாவிடம் கூறுகையில், சோட்டா ராஜன் மீது கிட்டத்தட்ட 65 வழக்குகள் உள்ளன. அனைத்திலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படுவார் என்று எதிர்பார்க்க முடியாது. சில வழக்குகள் வலுவாக உள்ளன. அவற்றில் அவருக்கு பெரிய தண்டனை கிடைக்க காவல்துறை முயலும் என்றனர்.
நான்கு வழக்குகள்
சோட்டா ராஜன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளில் நான்கு வழக்குகள் மிகவும் வலுவானவை என்று கூறப்படுகிறது. 2011ல் நடந்த பக்மோடியா தெரு துப்பாக்கிச் சூடு, பிரபல பத்திரிகையாளர் ஜோதிர்மாய் டே கொலை வழக்கு, 2005ல் நடந்த ஒரு கடத்தல் வழக்கு, ஜேஎன்பிடி ஆயுதப் பதுக்கல் வழக்கு ஆகியவை சோட்டா ராஜனுக்கு எதிராக வலுவானதாக இருப்பதாக கூறப்படுகிறது.
2005 கடத்தல் வழக்கு
2005ம் ஆண்டு சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்தவர்கள், டெல்லியைச் சேர்ந்த வைர வியாபாரியை கடத்தி ரூ. 1 கோடி பறிக்கத் திட்டமிட்டனர். அவருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தனர். பணம் தராவிட்டால் கொன்று விடுவதாக மிரட்டினர். இதேபோல மும்பை மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 கட்டுமான நிறுவனத்தினரை மிரட்டிப் பணம் கேட்டதாகவும் சோட்டா ராஜன் மீது வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் ஏற்கனவே விசாரிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டு விட்டனர்.
பக்மோடியா தெரு துப்பாக்கிச் சூடு
2011ம் ஆண்டு மே 17ம் தேதி சோட்டா ராஜனின் கும்பலைச் சேர்ந்த 2 பேர் பக்மோடியா தெருவில் உள்ள தாவூத் இப்ராகிமின் சகோதரர் இக்பால் கஸ்கரின் வீட்டுக்கு வெளியே சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் கஸ்கரின் பாதுகாவலர் ஆரிப் சையத் அபு பக்கா கொல்லப்பட்டார்.
ஜேஎன்பிடி ஆயுத வழக்கு
2005ம் ஆண்டு மே 21ம் தேதி மும்பை போலீஸார், ஜவஹர்லால் நேரு துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். அதில் அதி நவீன துப்பாக்கிகளும் இருந்தன. கிரீஸ் பேரல்களில் இதைப் பதுக்கி வைத்திருந்தனர். சோட்டா ராஜன் கும்பலே இதைச் செய்திருந்தது. தனது உதவியாளரான பாரத் நேபாளி மூலமாக இதைக் கடத்த திட்டமிட்டிருந்தார் சோட்டா ராஜன். இந்த வழக்கில் முக்கிய சாட்சியான நர்சிங் மோடி என்பவரை சோட்டா ராஜன் கும்பல் 2006ல் சுட்டுக் கொன்று விட்டது.
பத்திரிகையாளர் கொலை வழக்கு
2011ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி மூத்த பத்திரிகையாளர் ஜோதிர்மாய் டே தனது தாயார் வீட்டுக்குப் போய் விட்டு திரும்பி வரும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். போவாய் என்ற பகுதியில் அவர் வந்தபோது நான்கு பேர் கொண்ட கும்பல் சுட்டுக் கொன்றது. சோட்டாராஜன்தான் இந்தக் கொலைக்கு உத்தரவிட்டார் என்பது போலீஸ் குற்றச்சாட்டு.
மற்ற வழக்குகளில் எப்படியோ நிச்சயம் இந்த நான்கு வழக்குகளிலும் ராஜனுக்கு பெரிய தண்டனை கிடைக்கும் என்கிறார்கள்.