ஊதிய உயர்வு கோரி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 4 நாள் வேலை நிறுத்தம்!
டெல்லி: ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வரும் 25ம் தேதி முதல் 4 நாட்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 19 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வங்கி நிர்வாகங்களை கேட்டு வருகின்றனர். முதலில் 11 சதவீத சம்பள உயர்வு வழங்க வங்கி நிர்வாகங்கள் முன்வந்தன. ஆனால் அது போதாது எனக்கூறி கடந்த மாதம் 7ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்தனர்.
ஆனால் அதே நாளில், வங்கி நிர்வாகங்கள் 11 சதவீதம் என்பதை 12.5 சதவீத அளவுக்கு உயர்த்தித்தர முன்வந்ததால், வேலை நிறுத்தத்தை ஒத்தி வைத்தனர். இதேபோன்று கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கி 4 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருந்ததையும் ஒத்திவைத்தனர்.
இப்போது மேலும் அரை சதவீதம் உயர்த்தி 13 சதவீத சம்பள உயர்வு வழங்க வங்கி நிர்வாகங்கள் நேற்று முன்வந்தன. ஆனால் இதை பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஏற்கவில்லை. நிராகரித்து விட்டனர். இதுதொடர்பாக வங்கி சங்கங்களின் ஐக்கிய பேரவை அமைப்பாளர் எம்.வி. முரளி கூறுகையில்; இந்திய வங்கியாளர்கள் சங்கம் 12.5 சதவீத சம்பள உயர்வை அரை சதவீதம் அதிகரித்து 13 சதவீதமாக வழங்குவதாக கூறி உள்ளது. இதை நாங்கள் ஏற்கமாட்டோம் என்றார்.
இதையடுத்து வரும் 25ம் தேதி தொடங்கி 4 நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இதை வங்கி பணியாளர்கள் தேசிய அமைப்பின் பொதுச்செயலாளர் அஷ்வினி ரானா அறிவித்தார்.