வாயில் மதுவை ஊற்றி மைனர் சிறுமி பலாத்காரம்: பி.இ. மாணவர்கள் உட்பட 5 பேர் கைது!
ஹைதராபாத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மாணவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்: ஹைதராபாத் கட்கேசர் பகுதியில் உள்ள கல்லூரியில் டிப்ளோமா படிக்கும் மாணவியை அதே கல்லூரியை சேர்ந்த மாணவர் வலுக்கட்டாயமாக வாயில் மதுவை ஊற்றி பலாத்காரம் செய்தது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்கேசர் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் டிப்ளோமா படித்து வரும் மாணவி, அதே கல்லூரியில் பொறியியல் படிக்கும் தனது நண்பர்கள் ஹரிஷ், சமீர், ஹேமந்த் ஆகியோருடன் அங்குள்ள ஹுக்கா பார்லருக்கு சென்றுள்ளார். அங்கு அவரை ஹுக்கா புகையை இழுக்கும்படி கட்டாயப்படுத்திய மாணவர்கள், அந்த சிறுமிக்கு வலுக்கட்டாயமாக வாயில் மதுவை ஊற்றியுள்ளனர்.
பின்னர் அங்குள்ள அறைக்கு அவரை தூக்கிச்சென்ற மாணவர்கள் வேறொரு கல்லூரியில் பொறியியல் படிக்கும் அஜய் என்ற மாணவனையும் வரவழைத்துள்ளனர். ஹரிஷ் என்ற மாணவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மற்ற மாணவர்கள் அதற்க்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
இதுதொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகளை அழித்த ஹுக்கா பார்லர் உரிமையாளர் அப்பாஸும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்த வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹுக்கா பார்லர் உரிமையாளர் அப்பாஸ் உட்பட 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைக்கு அடிமையாக்கி சிறுமியை உடன் படிக்கும் மாணவரே பாலியல் பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.