மேற்கு வங்காளம்: மாடுகளைத் திருட முயன்ற 4 பேரை உயிரோடு கொளுத்திய கிராம மக்கள்
ஜால்பைகுரி: மேற்கு வங்க மாநிலத்தில் மாடுகளை திருட முயற்சித்த குற்றத்திற்காக நான்கு திருடர்களை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர் அப்பகுதி மக்கள்.
மேற்கு வங்க மாநிலம் ஜால்பைகுரி அருகே, பாலராம் என்ற இடத்தில் இன்று காலை 3 மணி அளவில் பண்ணையில் கட்டி வைக்கப் பட்டிருந்த மாடுகளை திருட நான்கு பேர் வந்ததாகக் கூறப்படுகிறது.
மாடுகளைத் திருடும் முயற்சியில் அவர்கள் எதிர்பாரத விதமாக கிராம மக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். பிடிப்பட்ட திருடர்களை கடுமையாக தாக்கி அவர்களை கட்டி வைத்து உயிருடன் தீ வைத்து எரித்துள்ளனர்அப்பகுதி மக்கள்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்த போது, பிடிபட்டவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்து சாம்பலாகி விட்டதாம். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா- வங்காளதேசம் எல்லையில் உள்ள இந்த கிராமத்தில் அடிக்கடி கால்நடைகள் திருடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஊர்மக்கள் ஆத்திரத்தில் இத்தகைய கொடூர செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.