5% முதல் 28% வரை 4 அடுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்கள் அமல்: உணவு தானியங்களுக்கு வரி விலக்கு-அருண் ஜெட்லி
உணவு தானிய பொருட்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும், சாமானிய மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பொருட்களுக்கு 5% மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்ல க
டெல்லி: நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி மசோதா சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம்தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை நிர்ணயிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலின் முக்கிய கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் 2 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் மற்ற மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.
இன்று நடைபெற்ற கூட்டத்திற்குப் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சரக்கு மற்றும் சேவை வரி எவ்வளவு என்பது இறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஜெட்லி, பொருட்களுக்கு 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்கு முறையில் ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
உணவு தானிய பொருட்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும், சாமானிய மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பொருட்களுக்கு 5% மட்டுமே சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படும் என்றார் நிதியமைச்சர் ஜெட்லி.
தொடர்ந்து பேசிய அவர் பிரிட்ஜ், டி.வி, செல்போன் போன்ற பொருட்களுக்கு 28% சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆடம்பர கார்களுக்கு 28 சதவீதத்தை விட கூடுதலாக வரி விதிக்கப்படும் என்றார்.
குளிர்பானங்கள், பான்மசாலா, கார்களுக்கு அதிகபட்சம் 28% சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்படும் என்றும், தங்கத்தின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி பின்னர் முடிவு செய்யப்படும் என்றார். ஜிஎஸ்டிஐ அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசு ஈடு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்பை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி மசோதா சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம்தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்த புதிய வரிவிகிதப்படி, உணவுப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு 5 சதவிகிதம் மட்டுமே சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட உள்ளது என்பதால் பல பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
தற்போது 29% வரி விதிப்பில் உள்ள தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின், இன்வெர்ட்டர், மின்விசிறி மற்றும் சமையல் சாதனங்களுக்கு இனிமேல் 28%ஜி.எஸ்.டி. வரியே விதிக்கப்படும் என்பதால் அவற்றின் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.