ஐ.ஆர்.என்.எஸ்.-1 டி செயற்கைக்கோளுடன் விண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி.-27 ராக்கெட்!!
சென்னை: பி.எஸ்.எல்.வி.சி-27 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1டி செயற்கைக்கோள் இன்று மாலை 5.19 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. இதன்படி ஏற்கனவே 3 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன.
இப்போது 4-வது செயற்கைகோளாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-டி யை பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு செலுத்த முடிவு செய்யப்பட்டது. இயற்கை சீற்றம், இயற்கைஇடர் மேலாண்மை, கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றை கண்காணிப்பதற்காக அனுப்பப்பட இருந்த இந்த செயற்கைகோள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் கடந்த 9-ந் தேதி மாலை 6.35 மணிக்கு ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-டி விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது. இதற்கான 59 மணி நேர கவுண்ட்டவுன் கடந்த 7-ந் தேதி காலை 7.35 மணிக்கு தொடங்கப்படுவதாக இருந்தது.
ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த ராக்கெட் ஏவும் திட்டத்தை கடந்த 4-ந் தேதி இஸ்ரோ தள்ளிவைத்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட் ஏவுவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருந்த போது வெப்ப கவசம் மூடப்பட்ட பின்னர், செயற்கைகோளுடன் இணைந்த ஏவு வாகனத்தில் உள்ள ஒருங்கிணைந்த மின்சார கருவிகளில் பழுது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தொழில்நுட்ப கருவிகளை ஆய்வு செய்ய வேண்டியிருந்ததால் ராக்கெட் ஏவும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தட்பவெப்ப நிலையை கவனித்து அதன்விளைவை ராக்கெட்டை தொலைவிடத்துக்கு அனுப்ப பயன்படும் மின்கருவிகள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணிகள் முழுவீச்சில் முடிவடைந்ததால் இன்று மாலை 5.19 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டது.
இதற்கான கவுண்ட்டவுண் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. இன்று மாலை 5 மணியில் இருந்து தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1-டி விண்ணில் ஏவப்படும் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பியது.
பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இந்த காட்சியை இஸ்ரோ தலைவர் கிரண்குமார் மற்றும் திட்ட இயக்குனர்கள் நேரடியாக கண்காணித்து கொண்டிருந்தனர்.
காற்றின் போக்கு மற்றும் வானிலையில் சாதகமான சூழல் நிலவியதை அவர்கள் உறுதிப்படுத்தினர். பின்னர், திட்டமிட்டபடி மாலை 5.19 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1டி செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது ஏவப்பட்ட 19 நிமிடங்களில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.