ரபேல்: ராகுலும், முன்னாள் பிரான்ஸ் அதிபரும் நாடகம் நடத்துகிறார்கள்.. அருண் ஜேட்லி தாக்கு
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் திட்டமிட்டு பேசுவதாக நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் திட்டமிட்டு பேசுவதாக நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக செய்த மிகப்பெரிய ஊழலாக ரபேல் ஊழல் மாறும் நிலையை எட்டி இருக்கிறது. விமானங்களை அதிக விலைக்கு வாங்கியதும், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை கொடுத்ததும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேமோடி தலைமையிலான அரசு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக சேர்த்துக் கொள்ள கூறியது என்று தெரிவித்தார். இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு தற்போது நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளித்துள்ளார்.
ஒரே மாதிரி பேசுகிறார்கள்
அருண் ஜேட்லி தனது பேட்டியில், இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சி தலைவரும், பிரான்சில் உள்ள எதிர்க்கட்சியில் இருப்பவரும் ஒரு மாதிரி பேசுவது சந்தேகத்தை தருகிறது. இருவரும் சொல்லிவைத்து பேசுவது தெளிவாக தெரிகிறது. இவர்கள் இருவரும் கூட்டாக பொய் சொல்கிறார்கள். இந்தியாவில் சரியான கூட்டணி அமையாமல் வெளிநாட்டில் கூட்டணி அமைக்க சென்றுவிட்டார் ராகுல் காந்தி.
முன்பே கூறினார்
அதோடு, ராகுல் காந்தி ஏற்கனவே பிரான்சில் ஒரு குண்டு வெடிக்க போகிறது என்று கூறினார். அவர் கூறி 10 நாட்களில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹாலண்டே பிரதமர் மோடிக்கு எதிராக பேசுகிறார். இதை பார்த்தாலே இவர்கள் சொல்லி வைத்து பேசுவது தெளிவாக தெரிகிறது. ஏற்கனவே எப்படி எல்லா பேசவேண்டும் என்று திட்டமிட்டுவிட்டு அவர்கள் பேசுகிறார்கள்.
மோடி ஏன் பேசாமல் இருக்கிறார்
இதில் மோடி பேச ஒன்றுமில்லை. தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சரும், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சரும் ஏற்கனவே இது குறித்து நிறைய விஷயங்களை பேசிவிட்டோம். இதில் மோடி பேச என்ன இருக்கிறது. தவறான தகவல்களுக்கு எல்லாம் பிரதமர் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
முற்றிலும் தவறு
இதில் ராகுல் காந்தி கூறுவது எல்லாம் முழுக்க முழுக்க பொய். ஒருவர் என்ன பொய் சொன்னாலும் காலம் காட்டிக் கொடுத்துவிடும் என்று வரலாறு நிரூபித்து இருக்கிறது. அது இந்த விஷயத்திலும் வெளியாகும். ராகுல் பேசியது தவறு என்று எல்லோருக்கும் தெரியவரும் என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார்.