ராகுல் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் அரசு மறுப்பு.. ரகசிய காப்பு ஷரத்து உள்ளது உண்மைதான் என அறிக்கை!
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரகசிய காப்பு ஷரத்து உள்ளது என பிரான்ஸ் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
Recommended Video
பாரிஸ்: ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரகசிய காப்பு ஷரத்து உள்ளது என பிரான்ஸ் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பேசிய ராகுல் காந்தி, பிரான்ஸிடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, குற்றம் சாட்டினார்.
ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதில் மோடியின் நண்பர் பலனைடந்திருப்பதாக சாடினார் ராகுல்காந்தி.
பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும் அவர் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
ஏகே அந்தோணி கையெழுத்து
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆக்ரோஷமாக எழுந்து கோபத்துடன் பதிலளித்தார். ராகுல் பேசி முடித்த பின் இதுதொடர்பாக விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி 2008ம் ஆண்டில், ரபேல் ஒப்பந்தத்தில் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற ஷரத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்றார்.
ரகசியங்களை காக்க வேண்டும்
இதுதொடர்பான ஆவணங்களையும் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் காட்டினார். பிரான்ஸ் அதிபர் ஒரு இன்டர்வியூவிலும், பிற நிறவனங்களின் போட்டி காரணமாக, ஒப்பந்த விவகாரங்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என கூறியுள்ளார் என்று விளக்கம் அளித்தார் நிர்மலா சீதாராமன்.
எந்த ஒப்பந்தமும் இல்லை
ஆனால் இதனை ஏற்க மறுத்த ராகுல் தான் பிரான்ஸ் அமைச்சரை சந்தித்ததாகவும் அப்படி எந்த ஒப்பந்தமும் இல்லை என பிரான்ஸ் அரசு தெரிவித்ததாகவும் கூறினார்.
ராகுல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு
இந்நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ரகசிய காப்பு ஷரத்து உள்ளதாக பிரான்ஸ் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு உடன்படிக்கை
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ள பிரான்ஸ் அரசு, 2008ம் ஆண்டு ரகசிய காப்பு ஷரத்தில் கையெழுத்திடப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.
ரகசியங்களை வெளியிட முடியாது
2008ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ரகசியங்களை பாதுகாக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தின்படி ரகசிய தகவல்களை வெளியிட முடியாது என்றும் பிரான்ஸ் அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் தனது குற்றச்சாட்டில் உறுதியாக உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவர்கள் வேண்டுமானால் மறுக்கட்டும். நான், ஆனந்த் ஷர்மா, மன்மோகன் சிங் ஆகியோர் பிரான்ஸ் அதிபரை சந்தித்தபோதுதான், அப்படி ஒரு ஷரத்து இல்லை என்று அவர் கூறியிருந்தார். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.