தாலிபான்களிடமிருந்து மீண்டு நாடு திரும்பிய சிவகங்கை பாதிரியார்... சுஷ்மாவை சந்தித்து நன்றி
டெல்லி: ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் பத்திரமாக மீட்கப்பட்டார். டெல்லி வந்த அவர் தன்னை மீட்டதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார்(32). ஏசு சபையின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக பாடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் சென்றார். அங்கு அவர் ஏசு சபையின் அகதிகள் சேவை திட்ட இயக்குனராக பணியாற்றினார்.
ஆப்கானிஸ்தானில் நடந்த போரால் பாதிக்கப்பட்ட அகதிகளின் மறுவாழ்வுக்காக அவர் பாடுபடுவது தாலிபான் தீவிரவாதிகளுக்கு பிடிக்கவில்லை. ஹெராத் நகர் அருகே உள்ள சோகாதத் கிராமத்தில் அகதிகளின் குழந்தைகளுக்காக ஏசு சபை பள்ளி ஒன்றை நடத்தி வருகிறது. அந்த பள்ளியை பார்வையிட சென்ற அலெக்சிஸை ஆயுதம் ஏந்திய தாலிபான் தீவிரவாதிகள் கடத்தினர்.
அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் அவரது குடும்பத்தார் தவித்தனர். அவரை மீட்டுக் கொடுக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அவர் கடத்தப்பட்டு 8 மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் தான் மீட்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவை எடுத்த நடவடிக்கைகளால் தான் அலெக்சிஸ் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட அவர் நேற்று விமானம் மூலம் டெல்லி வந்தார். அவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து தன்னை மீட்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.