மலிவு விலை போனை புக் செய்யக் குவிந்த மக்கள்- ”ப்ரீடம் 251” செல்போன் இணையதளம் "கிராஷ்"!
டெல்லி: ரூ. 251க்கு அறிவிக்கப்பட்ட மலிவு விலை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனை புக் செய்ய அதிக அளவில் மக்கள் இணையதளத்தை மொய்த்ததால் அந்த இணையதளத்தின் சர்வர் கிராஷ் ஆகி விட்டது.
மேக் இன் இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்துவதற்காக ரிங்கிங் பெல்ஸ் என்ற புதிய மொபைல் நிறுவனம், ரூபாய் 251 க்கு மலிவு விலை "ப்ரீடம் 251" என்கின்ற ஸ்மார்ட் போனை நேற்று அறிமுகம் செய்தது. உலகிலேயே இதுதான் விலை குறைந்த ஸ்மார்ட் போன் ஆகும்.
முதலி்ல இதன் விலை ரூ. 500 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் இதை மேலும் குறைத்து 251 என்று ஆக்கி விட்டனர்.
இதற்கான முன்பதிவு ஆன்லைனில் இன்று காலை 6 மணிக்கு துவங்கி பிப்ரவரி 20 ஆம் தேதி இரவு 8 மணி வரை நடக்கும் என கூறப்பட்டிருந்தது. இதனால் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே ஏராளமானோர் முன்பதிவு செய்ய முயன்றதால், இணையதளம் முடங்கியது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் ஸ்மார்ட்போனை வாங்க ஓரே நேரத்தில் www.freedom251.com என்ற இணையதள முகவரியில் லட்சக்கணக்கானோர் திரண்டதால் அந்த இணையதளம் முடங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகினர்.