ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி குழுமத்தை சேர்த்தது மோடி அரசுதான்.. பிரான்ஸ் முன்னாள் அதிபர் பரபர பேட்டி
Recommended Video
டெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மத்திய மோடி அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
2016ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கு பங்கேற்பதற்காக ஹாலண்டே இந்தியா வந்திருந்தார். அப்போது பிரதமர் மோடி மற்றும் ஹாலண்டே நடுவே 36 ரபேல் விமானங்களை வாங்குவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
Dassault Aviation மற்றும் இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் அரசுத்துறை நிறுவனமும் இணைந்து தான் ரபேல் போர் விமானங்களை தயாரிப்பதாக இருந்தது. ஆனால் மோடி அரசு தான் அந்த ஒப்பந்தத்தை மாற்றி விட்டது என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டி வரும் நிலையில் பிரான்ஸ் முன்னாள் அதிபர், அம்பானி குழுமத்தை இந்த ஒப்பந்தத்திற்குள் கொண்டுவந்தது மோடி அரசுதான் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹாலண்டே அந்த நாட்டு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறுகையில், பிரான்சு நாட்டுக்கு எந்த ஒரு வேறு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அம்பானி குழுமத்துடன். மட்டுமே இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது, என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பேட்டியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி, மத்திய அரசு மீது சாடியுள்ளது. மோடி அரசு பின்னிய பொய் வலைகளை பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அம்பலப்படுத்தி விட்டார். இந்த ஒப்பந்தத்தில், ரிலையன்ஸ் குழுமத்தை இணைத்து வைத்தது மோடி அரசுதான் என்று காங்கிரஸ் வெளியிட்ட ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 ரஃபேல் போர் விமானங்கள் 59 ஆயிரம் கோடி மதிப்புக்கு வாங்குவது என்று 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் ஆப்செட் புரோக்ராம் செய்ய இணைக்கப்பட்டது. ரிலையன்ஸ் 51 சதவீத பங்குகளும், Dassault Aviation 49 சதவீத பங்குகளும் வைத்திருப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.