குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே?
டெல்லி: வரும் குடியரசு தின விழாவுக்கான சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் ஹோலண்டேவை அழைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் அமெரிக்கா அதிபர் ஒபாமா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வரும் 2016-ஆம் ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டேவை அழைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் போது ஹோலண்டேவை பிரதமர் மோடி சந்தித்து பேசியிருந்தார். வரும் டிசம்பர் மாதம் ஐ.நா. சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டிலும் ஹோலண்டேவை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். அந்த சந்திப்பின் போது குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என்பதற்கான முறைப்படியான அழைப்பு விடுக்கப்பட இருக்கிறது.
குடியரசு தின விழாவில் ஹோலண்டே பங்கேற்றால் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் 4வது பிரான்ஸ் தலைவராவார். 1976 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் ஜேக்குஸ் சிராக், 1980ஆம் அண்டு அதிபர் வலேரி ஜிஸ்கார்ட் எஸ்டெயிங், 2008ஆம் ஆண்டு அதிபர் நிக்கோலஸ் சர்கோசி ஆகியோர் குடியரசு தின சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருந்தனர்.
ஹோலண்டே மட்டுமின்றி இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்கெல் மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரில் ஒருவரை அழைப்பது தொடர்பாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.