மத உணர்வுகளைப் புண்படுத்தி விட்டார்.. மறுபடியும் சிக்கலில் ராதே மா
சண்டிகர்: மத உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாக சர்ச்சை சாமியார் ராதே மா மீது சண்டிகரில் புகார் கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு கபூர்தலா போலீஸாருக்கு பஞ்சாப் -ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த பக்வாவாரா என்ற ஊரைச் சேர்ந்த சுரேந்தர் மிட்டல் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் அவர், துர்க்கையாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டு செயல்பட்டும், பேசியும், புகைப்படம் வெளியிட்டும் வருகிறார் ராதே மா. இது இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் 3 மாதத்திற்குள் ராதே மா மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர். இதுகுறித்து மனுதாரரின் வழக்கறிஞர் கிருஷன் தத்வால் கூறுகையில், கபூர்தலா மாவட்ட எஸ்.பிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அவர் மீதான புகாரில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்குமாறும் போலீஸாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்றார்.
பெண் சாமியார் ராதே மா மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. இந்த நிலையில் இந்தப் புகார் புதிதாக சேர்ந்துள்ளது.