பார்க்கிங் வசதி இல்லாவிட்டால் வாகனம் வாங்க முடியாது.. பெங்களூரில் அடுத்த ஆண்டு முதல் புதிய விதிமுறை
பெங்களூர்: பார்க்கிங் வசதி இல்லாவிட்டால், பெங்களூரில் புதிதாக வாகன பதிவுக்கு அனுமதி கொடுக்க கூடாது என போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் டி.சி.தம்மண்ணா கூறுகையில், அதிரடியாக இப்படி ஒரு முடிவை அறிவிக்கும் முன்பாக, அடுத்த ஓராண்டுக்கு வாகன உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்படும். கார்பூலிங் மற்றும் அரசு பொது போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.
ஓராண்டு கழித்து, வாகன பதிவில் கட்டுப்பாடு கொண்டுவரப்படும். பெங்களூரில் டிராபிக் பிரச்சினை பெரிதாகிக்கொண்டுள்ளது. பெரும்பாலான வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சாலைகளின் ஓரங்களில்தான் நிறுத்தி வைக்கப்படுகின்றன. பொது போக்குவரத்துதான் இதற்கு நல்ல தீர்வு. மக்களின் ஆதரவை நான் எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.