'ஊடக விபச்சாரிகள்'விமர்சனத்துக்கு அருண் ஜேட்லி கண்டனம்- ட்விட்டரில் சாடும் வி.கே.சிங் ஆதரவாளர்கள்!
டெல்லி: "ஊடக விபச்சாரிகள்" என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் விமர்சனம் செய்ததைக் கண்டித்த மூத்த மத்திய அமைச்சர் அருண்ஜேட்லிக்கு ட்விட்டர்வாலாக்கள் கடும் கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் வி.கே.,சிங் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருபவர்.. அண்மையில் பாகிஸ்தான் தேசிய தின விழாவில் கலந்து கொண்டு கடும் விமர்சனத்துக்குள்ளானார். ஊடகங்களும் தொடர்ந்து அவரை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
தம் மீதான ஊடகங்களின் விமர்சனங்களுக்கு பின்னால் ஆயுத தரகர்கள் இருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டி வந்தார் வி.கே.சிங். ஒரு கட்டத்தில் 'ஊடக விபச்சாரிகள்' எனவும் விமர்சனம் செய்தார். இதற்கு பலத்த கண்டனம் எழுந்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் வி.கே.சிங்கின் இந்த விமர்சனத்துக்கு மூத்த மத்திய அமைச்சரான அருண் ஜேட்லி கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார். இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்துவதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அருண் ஜேட்லி கூறியிருந்தார்.
அருண்ஜேட்லியின் இந்த கருத்து வி.கே.சிங் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. சமூக வலைதளமான ட்விட்டரில் #ShameOnArunJaitley என்ற தலைப்பில் ஹேஸ்டாக் உருவாக்கப்பட்டு ஜேட்லியை வறுத்தெடுத்து வருகின்றனர் அவர்கள்...
மத்திய அமைச்சர்களிடையேயான இந்த மோதல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.