திஹார் சிறையில் சுப்ரதாவுக்கு ஆபீஸ்.. அங்கு அமர்ந்தபடி வெளியில் வர ரூ. 10,000 கோடி திரட்டுகிறார்!
டெல்லி: திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஹாரா நிறுவனத் தலைவர் சுப்ரதா ராய், திஹார் சிறையில் இருந்தபடியே தனது முக்கியமான சில சொத்துக்களை விற்கும் வேலையில் இறங்கியுள்ளார். இதற்காக அவருக்கு திஹார் சிறைக்குள்ளேயே அலுவலகமும் ஒதுக்கிக் கொடுத்துள்ளனர்.
ஜாமீன் பெறுவதற்கு ரூ. 10,000 கோடி பிணைத் தொகையைக் கட்ட வேண்டிய நிலையில் சுப்ரதா ராய் உள்ளார். எனவே தனது சில சொத்துக்களை அவர் விற்றுப் பணம் திரட்டவுள்ளார். அதற்காகவே இந்த ஏற்பாடு.
நியூயார்க் பிளாசா, லண்டனில் உள்ள கிராஸ்வெனோர் ஹவுஸ், இன்னொரு நியூயார்க் ஹோட்டல் ஆகிய சொத்துக்களை விற்கிறார் சுப்ரதா ராய்.
சிறைக்குள் 600 சதுர அடி அலுவலகம்
சிறையில் இருந்தபடியே தனது சொத்துக்களை விற்க வசதியாக திஹார் சிறைக்குள்ளேயே சுப்ரதாவுக்கு 600 சதுர அடியிலான ஒரு சிறிய அலுவலகத்தை ஒதுக்கியுள்ளது திஹார் சிறை நிர்வாகம். உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த அலுவலகத்தைப் பெற்றுள்ளார் சுப்ரதா ராய்.
வீடியோ கான்பரன்சிங் வசதியுடன்
இந்த அலுவலகத்தில் வீடியோ கான்பரன்சிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே சொத்துக்களை வாங்க முன்வருவோரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலமாகவே பேசும் வாய்ப்பு சுப்ரதாவுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
பக்கத்திலேயே செல்
இந்த அலுவலக அறைக்குப் பக்கத்திலேயே 3 படுக்கை வசதி கொண்ட ஒரு செல் அறை உள்ளது. இங்குதான் சுப்ரதா ராயும், அவருடன் சேர்த்து சிறையில் அடைபட்டுள்ள அவரது உதவியாளர்கள் இருவரும் தங்கியுள்ளனர்.
சுப்ரதா ராய் ஹேப்பி அண்ணாச்சி!
சுப்ரதா ராய் சிறையில் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், சக கைதிகளுடன் பேசுவதாகவும் திஹார் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள அலுவலகம் குறித்து அவர் திருப்தியுடன் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.