ஹெச்.டி.எப்.சி., ஆக்சிஸ் வங்கிகளின் ஏடிஎம் பயன்பாட்டுக்கு இன்று முதல் கட்டுப்பாடு
டெல்லி: ஏடிஎம் பயன்படுத்துவதில் ஹெச்.டி.எப்.சி மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் இன்று முதல் கட்டுப்பாட்டை கொண்டு வருகின்றன.
டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா ஆகிய ஆறு பெருநகரங்களில் ஏடிஎம் பயன்பாட்டுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டை விதித்தது.
அதன்படி, கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம்-மில் இருந்து இலவசமாக பணம் எடுக்க மாதம் 5 முறைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். பிற வங்கிகளின் ஏடிஎம் மெஷின்களில் மாதத்திற்கு அதிகபட்சம் 3 முறை மட்டுமே கட்டணமில்லாமல் பணம் எடுக்க முடியும். அனுமதிக்கப்பட்ட தடவைகளுக்கு மேல் ஏடிஎம் மையங்களை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் ரூ.20 கட்டணம்.
ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்தால் மட்டுமின்றி, பண இருப்பை சோதித்து பார்க்கவும் இந்த விதிமுறை பொருந்தும் என்பதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியிலுள்ளனர்.
பிற வங்கிகள் இந்த நடைமுறையை நவம்பர் 1ம்தேதி முதல் அமலுக்கு கொண்டுவந்த நிலையில், முன்னணி தனியார் வங்கிகளான ஹெச்.டி.எப்.சி மற்றும் ஆக்சிஸ் ஆகிய வங்கிகள் இன்று முதல் இந்த நடைமுறையை அமல்படுத்த தொடங்கியுள்ளன.