உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு தமிழகத்தை சேர்ந்த பானுமதி பெயர் பரிந்துரை!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான நீதிபதிகள் நியமனக் குழு, பிரதமர் மோடியின் வலதுகரமான அமித்ஷாவின் வழக்கறிஞர் யு.யு. லலித், தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி, மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரபுல் சந்திர பந்த், குவஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் மனோகர் சாப்ரே ஆகியோரை புதிய நீதிபதிகளாக பரிந்துரைத்துள்ளது.
நீதிபதி ஆர்.பானுமதி தமிழகத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சாமியார்கள் பிரேமானந்தா மற்றும் நித்தியானந்தா வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்தவர்.
1998-ம் ஆண்டு பானுமதி மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2003-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். கடந்த ஆண்டு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
இந்நிலையில்தான் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக பானுமதியின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக செல்வது என்பது அரிதான ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக பானுமதி நியமிக்கப்பட்டால் அவர் அங்கு பணியாற்றும் 2வது பெண் நீதிபதியாவார். ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நீதிபதியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.