தீபக் மிஸ்ராவிற்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு... சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர காங். முடிவு!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
டெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் அளித்த இம்பீச்மென்ட் தீர்மானம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்க தொடரப்படும் என்று கபில் சிபில் கூறியுள்ளார். இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு தீர்மானம் தொடக்க நிலையிலேயே நிராகரிக்கப்பட்டுவிட்டதாக கபில் சிபில் குற்றம்சாட்டியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து 64 எம்.பிக்கள் கையெழுத்திட்டு குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் இம்பீச்மென்ட் தீர்மானத்தை அளித்தனர். இந்த தீர்மானத்தில் நம்பகத்தன்மை இல்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை வெங்கையா நாயுடு நிராகரித்து விட்டார்.
மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞருமான கபில் சிபல், தீர்மானத்தை நிராகரித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது : தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்குவதற்கான தீர்மானத்தை குடியரசு துணைத்தலைவர் நிராகரித்தது சட்டவிரோதம். தீர்மானம் முறையாக இருக்கிறதா? இல்லையா என்பதை மட்டுமே ஆராய வேண்டும். தீர்மானத்தை அவசர கதியில் வெங்கையா நாயுடு நிராகரித்துள்ளார்.
தீர்மானம் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். இந்திய வரலாற்றிலேயே இதுவரை எப்போதும் இல்லாத விதமாக எம்.பிக்கள் கையெழுத்திட்டு அளித்த இம்பீச்மென்ட் தீர்மானம் தொடக்க நிலையிலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது. வெங்கய்ய நாயுடுவின் இந்த முடிவு மக்களின் நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சர்ஜ்வாலாவும் வெங்கயக்க நாயுடுவின் முடிவை விமர்சித்திருந்தார். ஜனநாயகம் புறக்கணிப்பு மற்றும் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கும் இடையில் நடக்கும் யுத்தம் இது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.