முஸ்லீம் முதியவர் படுகொலை பற்றியெல்லாம் பிரதமர் பேச மாட்டாராமே.. கத்காரி சொல்கிறார்!
டெல்லி: தாத்ரி படுகொலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்துக் கூற மாட்டார். அது அவரது வேலை அல்ல என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கக்தாரி.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பிரதமர் வாய் திறப்பதில்லை என்பது நாடு முழுவதும் உள்ள பொதுவான குற்றச்சாட்டு. இந்த நிலையில் பெரும் சர்ச்சையையும், கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்திய தாத்ரி படுகொலை குறித்து பிரதமர் பேச மாட்டார். அது அவரது வேலை அல்ல என்று மத்திய அமைச்சர் கத்காரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. மாநிலம் தாத்ரி கிராமத்தில் மாட்டுக் கறி சாப்பிட்டதாக கூறி ஒரு முஸ்லீம் முதியவரை மத வெறிக் கும்பல் கொடூரமாக அடித்துக் கொன்ற இந்த சம்பவம் குறித்து இதுவரை பிரதமர் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கத்காரி அளித்துள்ள ஒரு பேட்டியில் நாட்டில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் பதில் தருவது பிரதமரின் வேலை அல்ல என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கத்காரி அளித்துள்ள பேட்டி...
இப்படி பேசினால் அப்படி.. அப்படி பேசினால் இப்படி
பிரதமர் ஏதாவது கருத்துக் கூறினால் ஏன் அப்படிக் கருத்துக் கூறினார் என்பார்கள். பேசாவிட்டால், ஏன் பேசவில்லை என்று கேட்கிறார்கள். என்ன இது.
எல்லாத்துக்கும் பேச முடியுமா
நாட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பிரதமர் பதில் அளித்துக் கொண்டிருக்க முடியுமா. அது அவரது வேலை அல்ல. உள்துறை அமைச்சர் இருக்கிறார், பிற அமைச்சர்கள் உள்ளனர்.
மன்மோகன் பேசினாரா
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஏதாவது பேசினாரா. அமைதியாகத்தானே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவர் மெளனம் காத்தார்.
புகார் சொல்வதே "மைனாரிட்டி"களின் வேலை
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் இப்படி மோடியை குறை சொல்வதே இந்த "மைக்ரோஸ்கோப்பிக் மைனாரிட்டி"களின் வேலையாகி விட்டது. தாத்ரி சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்கும் வகையில் அரசு நிச்சயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்.
யாருக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல
இந்த அரசு தெளிவான கொள்கையுடன் ஆட்சி புரிந்து வருகிறது. நாங்கள் எந்த மதத்திற்கும், எந்த ஜாதிக்கும் விரோதமானவர்கள் அல்ல என்று கூறியுள்ளார் கத்காரி.