திருமணத்திற்குப் பின் 'குண்டாகும்' மனைவிகளை டைவர்ஸ் செய்ய முடியாது... மும்பை ஹைகோர்ட்
மும்பை: திருமணத்துக்கு பின்னர் மனைவியின் உடல் எடையை அதிகரித்தைக் காரணம் காட்டி, கணவர் விவாகரத்து கோர இயலாது என மும்பை ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.
மராட்டிய மாநிலம், புனே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், சோலாப்பூரில் இயங்கி வரும் திருமண தகவல் மையம் மூலம் தனது மனைவியைத் தேர்ந்தேடுத்தார். திருமணத்திற்குப் பின்னர் அவரது மனைவியின் உடல் எடை அதிகரித்துள்ளது.
எனவே, உடல் எடையைக் காரணம் காட்டி விவாகரத்துக் கோரி புனே குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அந்த வாலிபர். வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், திருமணத்துக்கு பின்னர் மனைவியின் உடல் பருமன் ஆகி விட்டது என்று கூறுவது, விவாகரத்துக்கு காரணம் ஆகாது என தீர்ப்பு அளித்தது. விவாகரத்து வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக மும்பை ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் அவர். அதில் அவர் கூறியிருந்ததாவது :-
திருமணத்துக்கு பிறகு எனது மனைவியின் உடல் பருமன் ஆகி விட்டது. இதற்காக அவரை மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளுமாறு கூறினேன். ஆனால் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. இதில் எனக்கு அவர் ஒத்துழைப்பு தர மறுத்து விட்டார். வீட்டு வேலைகளையும் அவர் செய்யாமல் மறுத்து வந்தார். எனவே வீட்டு வேலைகளும் என்மீது விழுந்தன. எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார். பிடிவாத குணமும் உள்ளது.
எனது மனைவி ஒருபோதும் மனைவிக்கே உரித்தான கடமைகளை செய்தது இல்லை. என் எதிர்பார்ப்பின்படி அவர் நடந்து கொள்ளவும் இல்லை. இருவரும் ஆரோக்கியமான தாம்பத்திய வாழ்க்கை நடத்த முடியாமல் போய் விட்டது. எனவே விவாகரத்து வழங்கி உத்தரவிட வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். சோனக், ஏ.எஸ். ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தன் மனைவி திருமணத்திற்கு முன்னதாக மார்பக அழகு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதை தன்னிடம் மறைத்து விட்டதாகவும், அதன் காரணமாகவே தற்போது உடல் எடை அதிகரித்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார் கணவர்.
ஆனால், இதனை மறுத்த மனைவி தரப்பு, தான் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதை வேண்டுமென்றே மறைக்கவில்லை என்றும், அதனை கூறுவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை எனவும் விளக்கமளித்தது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், திருமணத்துக்கு பின்னர் மனைவியில் உடல் பருமன் ஆகி விட்டது என்று கூறுவது, விவாகரத்துக்கு ஒரு காரணம் ஆகாது என கூறி, அப்பீல் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள தீர்ப்பின் விபரமாவது :-
திருமணம் நடந்தேறி விட்டது, உச்சக்கட்ட மணவாழ்க்கை நடந்திருக்கிறது என்பதை வழக்குதாரர் ஒப்புக்கொண்டுள்ளார். அவரது ஒரே அசவுகரியம், மனைவி உடல் பருமனுடன் இருக்கிறார் என்பதுதான். இது விவாகரத்துக்கு ஒரு காரணம் ஆகாது.
தனது மனைவிக்கு எதிராக வழக்குதாரர் கூறிய வலுவான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவில்லை. எனவே அவரது குற்றச்சாட்டுக்களை நம்புவதற்கு இல்லை. இந்த வழக்கில் எதிர்வழக்குதாரர் (அனாமிகா) சண்டைபோடும் இயல்பைக் கொண்டவர், பிடிவாத குணம் உடையவர் என்று கூறி இருப்பதெல்லாம் விவாகரத்துக்கு காரணங்கள் ஆகாது.
இவ்வாறு அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.