எப்படி இருந்தவங்க.. சேவாக்கும், கம்பீரும் இப்படியா ஒரு முடிவை எடுக்கனும்!
டெல்லி: லோக்சபா தேர்தலின்போது கிரிக்கெட் வீரர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் கவுதம் கம்பீர் இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளபோது, பாரதிய ஜனதா கட்சி தற்போது தங்களின் 30 முதல் 40 சதவீத சிட்டிங் எம்பிகளுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப் போவதில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு பதிலாக புதிய முகங்களை களமிறக்க கட்சி திட்டமிட்டுள்ளது.
டெல்லியிலும் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு மட்டுமே மீண்டும் சிட்டிங் எம்பிக்கு சீட்டு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
கிரிக்கெட் வீரர்கள்
மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு டெல்லியில் தலா ஒரு தொகுதியை, பாரதிய ஜனதா கட்சி கொடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விரு பிரபல கிரிக்கெட் வீரர்களும் டெல்லியை சேர்ந்தவர்கள். கேரளாவில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பாஜகவில் இணைக்கப்பட்டதை போல இங்கும் நடக்கும் என கூறப்படுகிறது.
டெல்லியில் கஷ்டம்
டெல்லியில் பலமாக உள்ள ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுவது என்பது டெல்லியை பொறுத்தளவில் மிகுந்த சிரமமான காரியம் என்பதால், பிரபலங்களை நம்பி களம் இறங்க தயாராகி வருகிறது.
கொள்கைகள்
வீரேந்திர சேவாக் மற்றும் கௌதம் கம்பீர் ஆகிய இருவருமே ட்விட்டர் வலைத்தளத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்களை அவ்வப்போது சொல்லி கேட்டு வருபவர்கள். மேலும் வலதுசாரி சிந்தனையை அதிகமாக தங்களது பதிவில் வெளிப்படுத்தி வருகிறார்கள். இவர்கள் கொள்கைக்கு பாரதிய ஜனதா கட்சி தான் ஏற்புடையதாக இருக்கும் என்று தெரிகிறது.
சித்து விளையாட்டுகள்
இருவருமே தீவிர கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கி விட்ட நிலையில் இனி அரசியலில் ஒரு சுற்று வரலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு உள்ளது. ஏற்கெனவே முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தற்போது பஞ்சாப் மாநில அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.