மங்காத்தா! கிரிக்கெட்டில் சூதாட்டத்தை அனுமதிக்கலாம்.. அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை!
கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
டெல்லி: கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
உலகம் முழுக்க மக்கள் அதிகம் பார்க்கும் விளையாட்டுகளில் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் முக்கியமான இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் கிரிக்கெட் ஆக்சிஜன் காற்றைவிட அதிகமாக சுவாசிக்கப்படுவதாக ஆய்வு ஒன்று சொல்கிறது. நாம் அந்த அளவிற்கு கிரிக்கெட் மோகத்தில் திரிகின்றோம்.
இந்த நிலையில் இந்த கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தை அனுமதிக்க, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பிஎஸ் சவுகான் தலைமையிலான இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு பல விதிமுறைகளையும் அறிமுகப்படுத்தி உள்ளது.
ஏற்கனவே இருக்கிறது
என்ன கிரிக்கெட்டில் சூதாட்டமா என்று நினைப்பவர்களுக்கு ஒரு அதிசயம் காத்திருக்கிறது. கிரிக்கெட்டில் ஏற்கனவே முறைப்படுத்தப்பட்ட சூதாட்டம் இருக்கிறது. கோவா, டாமன், சிக்கிம் ஆகிய பகுதிகளில் விளையாட்டு போட்டிகளை வைத்து பல கட்டுப்பாடுகளுடன் சூதாட்டம் செய்ய அனுமதி உள்ளது. இதன் மூலமும் அரசுக்கு ரூபாய் 3 லட்சம் கோடி வரை கூட வருடத்திற்கு வருமானம் வருகிறது.
என்ன காரணம்
ஐபிஎல் 2013 தொடரின் போது சூதாட்ட புகார் எழுந்தது. இது இந்திய கிரிக்கெட் உலகையே ஆட்டிபடைத்தது. அது சம்பந்தப்பட்ட வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம், இந்தியசட்ட ஆணையத்திற்கு ஒரு பரிந்துரையை கொடுத்தது. அதன்படி, கிரிக்கெட் சூதாட்டம் குறித்தும், அதன் பரிந்துரைகள் குறித்தும் விளக்கம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
ஓகே பாஸ்
இந்த நிலையில் இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டத்தை முறைப்படுத்த மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி மத்திய அரசு மிகவும் கண்டிப்பான, விதிமுறைகளை கொண்ட, கிரிக்கெட் சூதாட்டம் செய்ய அனுமதி அளித்து சட்டம் ஒன்றை உருவாக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் சட்டவிரோதமாக நடக்கும் சூதாட்டத்தை ஒழிக்கலாம் என்றும் கூறியுள்ளனர் .
கட்டுப்பாடு
இதற்கு விதிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் அந்த ஆணையம் பரிந்துரையில் கூறியுள்ளது. அதன்படி, இதில் பரிமாற்றப்படும் பணம் முழுக்க முழுக்க இணையம் முழுக்க வங்கிகளில் மாற்றப்பட வேண்டும். இதன் மூலம் கருப்பு பணம் பயன்படுத்தப்படாததை உறுதி செய்ய முடியும். அதேபோல் ஆதார் கார்ட், பென் கார்ட் வைத்து உரிய சான்றிதழுடன் விளையாட வேண்டும். அதேபோல் ஒருவர் ஒரு வருடத்தில் இவ்வளவு முறைதான் சூதாட்டம் செய்ய முடியும் என்றும் விதி ஏற்படுத்த வேண்டும்.
விதிகள்
மேலும் குறிப்பிட்ட வருமானத்திற்கு குறைவாக இருப்பவர்கள் சூதாட்டம் செய்ய அனுமதிக்க கூடாது. அதேபோல் சூதாட்டத்தில் ஜிஎஸ்டி மூலம் அதிக வரி விதிக்க வேண்டும். அதேபோல் வெளிநாட்டில் இருந்து பணம் வருவதை ஊக்குவிக்க வேண்டும். இது இந்திய பண மதிப்பை அதிகரிக்கும். அந்நிய வருவாயை அதிகரிக்கும்.
முக்கியம்
மிக முக்கியமாக இதில் போட்டியை மாற்றும் வகையில் சூதாட்டம் செய்ய கூடாது. போட்டியில் நடப்பதை கணித்து மட்டுமே சூதாட்டம் செய்யலாம். எந்த நிலையிலும் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் சம்பந்தப்பட்டவர்கள் இதில் ஈடுபட கூடாது. அதேபோல் அவர்களுடன் தொடர்பிலும் இருக்க கூடாது என்று விதி உருவாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
என்ன நன்மை
இதனால் என்ன நன்மை வரும் என்றும் கூறியுள்ளது. இந்திய அரசுக்கு முறைப்படி வருவாய் வரும். இதை மாநில, மத்திய அரசே ஏற்று நடத்தலாம். இதன்மூலம் முறையற்ற சூதாட்டம் மொத்தமாக குறையும். அதேபோல் வரி மூலம் வருவாய் அதிகரிக்கும். கருப்பு பணம் பதுங்குவது குறையும் என்றும் கூறியுள்ளனர்.
என்ன பிரச்சனை
எவ்வளவு விதிகள் கட்டுப்பாடுகள் இருந்தாலும் கிரிக்கெட் போட்டிகள் மறைமுகமாக இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கிரிக்கெட் வீரர்கள் விலை போகவும் வாய்ப்புள்ளது. அதேபோல் மிகவும் நல்ல நிலையில் இருக்கும் இந்திய கிரிக்கெட் விளையாட்டு மோசமாகவும் வாய்ப்புள்ளது. இது குறித்து இனி மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.