மகாத்மா காந்தியை கோட்சே மட்டும்தான் சுட்டார்.. உச்சநீதிமன்றத்தில் அமரேந்தர் சரண் அறிக்கை
மகாத்மா காந்தியை கோட்சேவை தவிர வேறு யாரும் சுட்டதற்கான ஆதாரமில்லை என உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
டெல்லி: மகாத்மா காந்தியை கோட்சேவை தவிர வேறு யாரும் சுட்டதற்கான ஆதாரமில்லை என உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அமரேந்தர் சரண் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறார்.
மகாத்மா காந்தி 1948 ஜனவரி மாதம் 30ம் தேதி நாதுராம் கோட்சே மூலம் கொல்லப்பட்டார். இந்த கொலையை பற்றி விசாரிக்க வேண்டுமென்று டாக்டர். பங்கஜ் பாண்டீஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு தொடுத்த டாக்டர். பங்கஜ் பாண்டீஸ் தரப்பு " காந்தியின் மீது 4 குண்டுகள் பாய்ந்து இறந்துள்ளார், 3 குண்டுகள் பாய்ந்ததாக மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது. அந்த நாலாவது குண்டு எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் " என்று குறிப்பிட்டது. இது பற்றி ஆய்வு செய்ய அமரேந்தர் சரண் என்ற வழக்கறிஞரை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
தற்போது தனது ஆய்வை முடித்து அமரேந்திர சரண் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறார். அதில் ''மகாத்மா காந்தியை கோட்சேவை தவிர வேறு யாரும் சுட்டதற்கான ஆதாரமில்லை. கோட்சே மட்டுமே காந்தியை கொலை செய்து இருக்கிறார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் காந்தி கொல்லப்பட்டதில் மறுவிசாரணை நடத்த தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக காந்தி மரணத்தின் மறுவிசாரணை தேவையா என்பது குறித்தும் ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு இருந்தது.