நிறவெறியால் தென்னாப்பிரிக்காவில் ரயிலில் இருந்து மகாத்மா காந்தி தூக்கி எறியப்பட்ட நாள் இன்று!
தென்னாப்பிரிக்காவில் ரயிலில் இருந்து மகாத்மா காந்தி தூக்கி எறியப்பட்ட நாள் இன்று.
டெல்லி: மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற வழக்கறிஞர் இந்திய தேசத்தின் தந்தையாக, மகாத்மா காந்தி அடிகளாக, தேசப் பிதா என போற்றக் கூடியவரை மாற்றிய நாள் இன்று.
தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் குஜராத்தின் போர்பந்தரில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. 1893-ம் ஆண்டு ஜூன் 7-ந் தேதியன்று டர்பன் நகரில் இருந்து பிரிட்டோரியா நகருக்கு செல்வதற்காக முதல் வகுப்பு டிக்கெட்டுடன் ரயிலில் பயணித்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.
ஆனால் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வெள்ளையர் இல்லை என்கிற ஒரே காரணத்துக்காக ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் பீட்டர்மாரிட்ஸ்பர்க் நிலையத்தில் ரயிலில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்டார். ஆங்கிலேயர்களின் நிறவெறிக் கொள்கையை காந்தி அனுபவித்த நாள் இது.
இதன்பின்னர்தான் காந்தி பொதுவாழ்வுக்கு வந்தார். சத்யாகிரகப் போராட்டங்களை முன்னெடுத்தார். காந்தியின் சத்யாகிரகப் போராட்டத்துக்கு வயது 125.
தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியர்களை ஒன்று திரட்டி போராட்டங்களை முன்னெடுத்தார். 4 முறை சிறைவாசம் அனுபவித்தார்.
இந்தப் போராட்டங்களின் மூலமாக இந்தியாவில் விடுதலைக்குப் போராடிக் கொண்டிருந்த கோபால கிருஷ்ண கோகலே, தாகூர் உள்ளிட்டோருடன் நட்புறவு ஏற்பட்டது. 1915-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி நாடு திரும்பினார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இந்த நாள் இன்றும் வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேசவிடுதலைப் போராட்டங்களை அகிம்சை வழியில் நடத்தியதால் மோகன்தாஸ் கரம்சந்த் என்பது போய் மகாத்மா காந்தியாக, காந்தியடிகளாக, இந்தியாவின் தேசத் தந்தையாக அடையாளப்படுத்தப்பட்டார்.
ஆனாலும் நாட்டின் தேசத் தந்தையை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துவிட்டது இந்துத்துவா தீவிரவாதம்.