கொடுமை.. 17 வயதான சிறுமியை கூட்டாக பலாத்காரம் செய்த கும்பல்.. வீடியோ எடுத்து மிரட்டல்
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமல்லாது இந்த கும்பல், பலாத்கார சம்பவத்தை வீடியோ எடுத்து பணம் கேட்டும் மிரட்டியுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது IPC பிரிவுகள் 376, 384, 354C மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மோடிநகர் போலீஸ் ஏசிபி ரித்தேஷ் திரிபாதி கூறியதாவது, "அசாம் மாநிலத்தின் கோடி நகர் அருகே உள்ள கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமாக இரண்டு மாடுகள் இருக்கின்றன. இந்த மாடுகள்தான் இவர்களின் வாழ்வாதாரம். கடந்த சில நாட்களாக வேளாண் தொழில் சரியாக கைக்கொடுக்காததால் மாட்டு பால் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு இவர்கள் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.
இம்மாடுகளுக்கு தீவனம் வாங்குவது என்பது மிகுந்த சிரமமாக இருந்திருக்கிறது. இந்நிலையில் நேற்று விவசாயி தன்னுடைய 17 வயது மகளை தீவனம் வாங்கி வருவதற்காக அனுப்பியுள்ளார். சிறுமியும் கடைக்கு சென்று தீவனம் வாங்கி வந்துள்ளார். இப்படி வந்துக்கொண்டிருக்கும் போது நான்குபேர் இந்த சிறுமியை பின்தொடர்ந்து வந்துள்ளனர். சிறுமிக்கு இது குறித்து தெரியவில்லை. சிறுமி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்த பின்னர், நால்வரும் சிறுமியை அருகில் இருந்த புதருக்குள் இழுத்து சென்றிருக்கிறார்கள்.
பலாத்காரம்
மறைவான இடத்தில் வைத்து சிறுமியை நான்கு இளைஞர்களும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த எதிர்பாராத தாக்குதலால் சிறுமி மயக்கமடைந்துள்ளார். இதனை கண்டு பயந்த இளைஞர்கள் அங்கிருந்து சென்றுவிட்டுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து விழித்த சிறுமி மிகவும் கஷ்டப்பட்டு வீடு வந்து சேர்ந்துள்ளார். வீட்டில் தந்தையிடம் நடந்த கொடுமை குறித்து கூறியுள்ளார். தந்தை உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பரிசோதனையில் சிறுமி பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
புகார்
மருத்துவமனை தரப்பிலிருந்து எங்களுக்கு முதலில் புகார் வந்தது. பின்னர் சிறுமியின் தந்தையை சந்தித்த அந்த இளைஞர்கள் சிறுமியின் பலாத்கார வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தரவில்லையெனில் வீடியோவை ஊர் முழுக்க பரப்பி விடுவோம் என்றும் எச்சரித்துள்ளனர். ஆனால் அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்க முடியாத தந்தை எங்களிடம் வந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் நாங்கள் விசாரணையை தொடங்கினோம். இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமான வீடியோவை நாங்கள் கைப்பற்றினோம். பின்னர் அடுத்த நான்கு மணி நேரத்திற்குள் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இளைஞர்கள்
ஒரேயொரு குற்றவாளி தலைமறைவாகியுள்ளார். இவரை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவரும் கைது செய்யப்படுவார். நாங்களும் எங்கள் தரப்பிலிருந்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுமதித்தோம். பரிசோதனையில் பலாத்காரம் செய்யப்பட்டது உண்மை என்று தெரிய வந்தது. தற்போது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையென்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய அம்சம் என்னவெனில் அனைத்து குற்றவாளிகளும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பதுதான்" என்று ஏசிபி ரித்தேஷ் திரிபாதி கூறியுள்ளார்.
வலியுறுத்தல்
பெண்களுக்கு எதிரான குற்றம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், எனவே இதனை தடுக்க காவல்துறையும் அரசும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மகளிர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. பெண்கள் குறித்த புரிதல் சமூகத்தில் மாற்றம் பெறாத வரை இந்த குற்றங்கள் குறையாது என்றும், இந்த மாற்றத்திற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.