பெங்களூருவில் வீடு புகுந்து கணவன் எதிரே மனைவியை பலாத்காரம் செய்த கொள்ளை கும்பல்
பெங்களூரு: போலீசார் போல நடித்து வீடு புகுந்து கணவன், மாமியார் முன்னிலையில் 9 மாத குழந்தையின் தாயை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை போலீசாரை கைது செய்தனர்.
பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டை சேர்ந்தவர் அந்த 25 வயது பெண்மணி. 9 மாத கைக்குழந்தை உள்ளது. கடந்த 24ம்தேதி இரவு சுமார் 11.40 மணிக்கு இவரின் வீட்டு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அப்பெண்ணின் கணவன் சென்று கேட்டதற்கு, தாங்கள் போலீசார் என்றும், கஞ்சா இருப்பதாக வந்த தகவலையடுத்து சோதிக்க வந்துல்ளதாகவும் வெளியில் நின்ற நபர்கள் தெரிவித்துள்ளனர். இதை நம்பி, அந்த நபரும் கதவை திறந்துள்ளார். அப்போது வெளியே நின்ற நான்கு பேர் கொண்ட அந்த இளைஞர் கும்பல் ஒன்று தட, தடவென வீட்டுக்குள் புகுந்து கதவை பூட்டிக் கொண்டது.
கத்தியை காண்பித்து மிரட்டி பெண், கணவன், மற்றும் அந்த பெண்ணின் மாமியார் ஆகிய வீட்டில் இருந்த மூவரையும் ஒரு ரூமில் போட்டு பூட்டிவிட்டு அவர்களின் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டது அந்த கும்பல்.
இதன்பிறகு வீட்டில் இருந்த ரூ.30 ஆயிரம் பணம், நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டதுடன், கைக்குழந்தையின் தாய் என்றும் பாராமல், 25 வயது பெண்ணை கூட்டாக அந்த கும்பல் பலாத்காரம் செய்துள்ளது. கயிற்றால் கட்டப்பட்டிருந்த பெண்ணின் கணவனாலும், மாமியாராலும் இதை பார்த்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
நான்கு பேர் கும்பலில் இருவர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்த நிலையில் மற்ற இருவரும் செல்போனில் அதை படம் பிடித்துள்ளனர். இதன்பிறகு பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணையும் கட்டிப்போட்டுவிட்டு அக்கும்பல் தப்பியோடிவிட்டது. சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து அனைவரையும் விடுவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த போலீசாரிடம் கொள்ளை நடந்துள்ளதாக மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் முதலில் புகார் அளித்துள்ளனர். எனவே போலீசாரும் இதேபோல கொள்ளை சம்பவங்களில் இதற்கு முன்பு ஈடுபட்ட நபர்களின் நடமாட்டங்களை கண்காணித்து வந்தனர். ஆனால் இரு நாட்கள் கழித்து மீண்டும் காவல் நிலையம் சென்ற அப்பெண்ணின் கணவர், பலாத்காரம் நடந்ததையும், வெளியில் சொல்ல கூச்சப்பட்டு அதை தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதையடுத்து ஏற்கனவே பதிவு செய்த புகாரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பலாத்கார புகாரையும் பதிவு செய்த போலீசார் அதன் அடிப்படையில் மறுநாளே பெங்களூர் அடுத்த சிக்பள்ளாப்பூர் பகுதியில் நான்கு குற்றவாளிகளையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெயர் நந்தீஷ், அனில்குமார், சுஜித் குமார், சிம்சன் என்றும், அனைவருமே பன்னர்கட்டா சாலையிலுள்ள கலேன அக்ரஹாரா பகுதியை சேர்ந்த 21 வயதினர் என்பதும் தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவலின்பேரில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் ஒரு அடமானக்கடையில் இருந்து மீட்கப்பட்டன.
இந்த கும்பல், பிடிஎம் லேஅவுட், ஹுலிமாவு, பரப்பன அக்ரஹாரா உள்ளிட்ட பகுதிகளிலும் இதேபோல வீடு புகுந்து கொள்ளையடித்துள்ளன என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.