தேர்தல் தோல்வி... ஜெயித்த வேட்பாளரின் மகள் பலாத்காரம்... மனமுடைந்த மாணவி தற்கொலை
வாரணாசி: உத்திரப்பிரதேசத்தில் தேர்தலில் தோற்ற ஆத்திரத்தில் வெற்றி பெற்ற வேட்பாளரின் மகளை எதிர்க்கட்சியினர் கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட அம்மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பெண் வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இதனால் ஆத்திரமடைந்த எதிர் அணியினர், வெற்றிப் பெற்ற பெண்ணை பழி தீர்க்க திட்டமிட்டனர். அதன்படி, சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வெற்றி பெற்ற வேட்பாளரின் மகளான 11ம் வகுப்பு மாணவியை மர்மநபர்கள் 2 பேர் கடத்திச் சென்றனர்.
மாணவியை வயல்வெளிக்குத் தூக்கிச் சென்ற அந்நபர்கள் அங்கு வைத்து அவரைப் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அவர்களிடமிருந்து தப்பி வந்த மாணவி, நடந்த சம்பவத்தை தாயாரிடம் கண்ணீருடன் கூறியுள்ளார். அதோடு தன்னைப் பலாத்காரம் செய்தவர்கள் எதிர் அணியினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், வழக்குப்பதிவு செய்யாமல், போலீசார் அவர்களை சமாதானப் படுத்தி திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவி சோகமாகவே இருந்துள்ளார். அதோடு போலீசாரும் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததால் மேலும் மனமுடைந்தார். விரக்தியின் விளிம்பிற்குச் சென்ற அம்மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பலாத்காரம், மாணவியின் தற்கொலை என அடுத்தடுத்த சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு அதிகளவில் போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டுள்ளனர்.