வடமாநிலங்களில் கனமழை: கங்கையில் பெருகிய வெள்ளத்தால் உ.பி., பீகார் மாநில மக்கள் தவிப்பு
அலகாபாத்: வடமாநிலங்களில் வரலாறு காணாது பெய்து வரும் கனமழையால் கங்கை ஆற்றில் வெள்ளநீர் அபாயகட்டத்தை தாண்டி பெருக்கெடுத்துள்ளது. குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது.
உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்காளம், உத்தரகாண்ட், மத்தியபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனால் பலர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
கனமழை காரணமாக உத்தரபிரதேசத்தில் கங்கை நதியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அலகாபாத், மிர்சாபுர், வாரணாசி, காசிபுர் மற்றும் பாலியா பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
இதேபோல், யமுனை நதியிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் வீடுகள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குடிக்க தண்ணீர் இன்றியும், உணவு கிடைக்காமலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாண்டா என்ற இடத்தில் பிரசவ வலியால் துடித்த பெண் ஒருவர் படகிலேயே குழந்தையை பெற்றெடுத்தார். வாரணாசியில் மண் அரிப்பால் ரயில்வே பாதை பாதிக்கப்பட்டது.
மத்தியபிரதேசத்தில் வெள்ளம் வடிந்து வந்தாலும் அது ஏற்படுத்திய விளைவுகள் மிக மோசமாக உள்ளது. கிராமங்களில் மக்களின் வீடுகள் உடமைகள் என அனைத்தையும் தொலைத்துவிட்டு மக்கள் நிர்கதியாய் நிற்கின்றனர் மக்கள். மீண்டும் மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பீகாரிலும் பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சாப்ரா மாவட்டத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் தூக்கத்தை தொலைத்து தவித்து வருகின்றனர்.
பாட்னாவில் கங்கை ஆற்றின் கரையோரம் இருந்த வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து விட்டது. அவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியவர்களுக்கு விமானம் மூலமாக உணவு, குடிநீர் போன்றவை அளிக்கப்படுகின்றன. பல இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பீகார் மாநிலமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. உத்தரகண்ட மாநிலத்தில் ராம்பூர் - நைநிட்டால் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்திலும் கங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்வதால், பல கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.