2020 மார்ச்சுக்குள்ள.. கங்கை நதியை சுத்தம் பண்ணிடுவோம்… சொல்வது அமைச்சர் நிதின் கட்கரி
நாக்பூர்:அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் கங்கை நதி சுத்தம் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
ரூ.26,000 கோடி மதிப்பிலான கங்கை தூய்மைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் தற்போது 10 சதவீதம் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள்ளாக அந்தப் பணிகள் 30-40 சதவீதம் நிறைவடைந்துவிடும்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள்ளாக கங்கையை தூய்மைப்படுத்தும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துவிடும். கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் மாவட்ட வாரியாக, மாநில வாரியாக, திட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான பதிவுகளை என்னால் வழங்க இயலும்.
கங்கை தவிர, அதன் 40 கிளை நதிகளையும் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கங்கை நதியின் நீரோட்டம் தொடர்ச்சியானதாக இருக்கும் வகையில், அந்த நதியோடு கூடுதலாக 20 சதவீத உபரிநீர் இணைக்கப்படுகிறது.
வரும் ஜூன் மாதத்தில் கங்கை நதியின் பயணம் மாசில்லா பயணமாக அமையும். அப்போது தூய்மையான கங்கை என்ற நமது கனவு நிஜமாகும்.
இது தவிர்த்து, யமுனையை தூய்மைப்படுத்தும் ரூ.800 கோடி மதிப்பிலான திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவே நல்ல நிர்வாகத்துக்கு எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார்.