டெல்லி மருத்துவமாணவி பலாத்கார வழக்கு: குற்றவாளிகளின் வக்கீல்களின் அங்கீகாரம் ரத்து?
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார சம்பவ வழக்கில் கைதான குற்றவாளிகள் சார்பில் ஆஜரான இரண்டு வழக்கறிஞர்கள், பாதிக்கப்பட்ட அம்மாணவி குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
அதில், அம்மாணவி திருமணத்துக்கு முன்பே உடல் உறவு வைத்துக் கொண்டிருந்தார் என்றும் நள்ளிரவில் ஒரு ஆணுடன் சென்றார் என்றும் தெரிவித்திருந்தார் ஒரு வழக்கறிஞர். மேலும்,அந்தப்பெண் தனது மகளாக இருந்திருந்தால், இரவில் அவ்வாறு சுற்ற அனுமதித்திருக்க மாட்டேன் எனவும், இத்தகைய சம்பவங்கள் நடைபெறாவண்ணம் தடுத்திருப்பேன் எனவும் கூறியிருந்தார்.
அத்தோடு, அந்தப் பெண் தனது மகளாக இருந்திருந்தால், தான் அவளை உயிருடன் எரித்திருப்பேன் என்றும் மற்ற பெற்றோர்களும் அதைத்தான் செய்ய வேண்டும் என அதிர்ச்சி கருத்து தெரிவித்திருந்தார்.
சர்ச்சைக்குரியவாறு பேசியதால் தற்போது அந்த இரு வழக்கறிஞர்களும் பிரச்சினையில் சிக்கியுள்ளனர். இத்தகைய கீழ்தரமான பேச்சுக்கள் மற்ற வழக்கறிஞர்களின் நற்மதிப்பை கெடுப்பதாக உள்ளதாகவும், மேலும் பெண்கள் மீதான வழ்முறைகளும் அத்துமீறல்களும் தொடர வழிவகை செய்வதாகவும் இவர்கள் மீது எதிர்ப்பு வலுத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததற்காக அந்த இரு வழக்கறிஞர்கள் மீது எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து டெல்லி பார் கவுன்சில் மெம்பர்கள் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் பொதுமன்னிப்பு கேட்காவிட்டால் அவர்கள் வழக்கறிஞர்களாக வாதாட வழி செய்யும் லைசன்ஸ் ரத்துச் செய்யப்படும் என்று பார் கவுன்சில் எச்சரிக்கை விடுக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.