கடும் வெப்பத்தில் பரிதவிக்கும் பெங்களூர்!
பெங்களூர்: குளுகுளு நகர் என்று அழைக்கப்படும் பெங்களூரில் ஏப்ரல் மாதத்தின் சராசரி வெப்ப நிலை அதிகரித்துள்ளது.
பெங்களூரில் ஏப்ரல் மாதத்தின் சராசரி அதிகபட்ச வெப்ப நிலை 34 டிகிரி செல்சியஸ். ஆனால் இந்தாண்டு அதைவிட இரண்டு டிகிரி செல்சியசாவது அதிகமாக பதிவாகிவருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இந்தாண்டின் அதிகபட்ச வெப்பநிலையாக 36.5 டிகிரி செல்சியசை பெங்களூர் தொட்டது.
இன்றைய நிலவரப்படி குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாகவும், அதிகபட்ச வெப்ப நிலை 36 டிகிரி செல்சியசாகவும் இருந்தது. பாரன்ஹீட் அளவில் இது 96.8 ஆகும். மொத்தத்தில் கடந்த சில நாட்களாகவே சராசரி வெப்ப நிலையைவிட பெங்களூரில் இரு டிகிரியாவது வெப்பம் அதிகமாகவே காணப்படுகிறது.
வேலூர், திருச்சி போன்ற நகரங்களில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் வாட்டிவருகிறது. ஆனால் குளுகுளு வானிலையிலேயே பழகிப்போன பெங்களூர்வாசிகளுக்கு இப்போதுள்ள வெப்பமே தாங்க முடியாத அளவில் உள்ளது.மரங்களை வெட்டி கட்டிடங்கள், மெட்ரோ ரயில் பாதை அமைத்தது, வாகன பெருக்கம் போன்றவை பெங்களூரின் வெப்ப நிலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
1931ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 38.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியதே பெங்களூரின் இதுநாள் வரையிலான சாதனை அளவாகும். ஆனால் வானிலை இலாகா ஆய்வுப்படி நாளை மற்றும் நாளை மறுநாள் பெங்களூரில் அதிகபட்ச வெப்ப நிலை 38 டிகிரி செல்சியசை ஒட்டியே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனபே பழைய சாதனை அளவை இவ்விரு நாட்களில் பெங்களூர் தாண்ட வாய்ப்புள்ளது.