மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் அடிவயிற்றை துளைத்த புல்லட்கள்... பிரேத பரிசோதனை அறிக்கை
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் அடிவயிற்றையும், மார்பையும் மர்ம நபர்களின் துப்பாக்கி தோட்டா துளைத்துள்ளதாக அவரது பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.
Recommended Video
பெங்களூர்: மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது அடிவயிற்றையும், மார்பு பகுதியையும் துப்பாக்கி தோட்டா துளைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ். சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இவர் இடது சாரி சிந்தனையாளர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவரும் கூட.
பிரேத பரிசோதனை
பெங்களூருவில் அவரது வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் நேற்று காலை 9.30 மணிக்கு கொண்டு வரப்பட்டது. தடயவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் எஸ்.வெங்கடராகவா பிரேத பரிசோதனை செய்தார்.
முதல் கட்ட அறிக்கை
அப்போது முதல் கட்டமாக அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது. அதில் கவுரியின் உடலில் 3 இடங்களில் தோட்டாக்கள் உள்ளே சென்ற அடையாளமும், வெளியே வந்த அடையாளமும் உள்ளன தெரியவந்தது.
3 தோட்டாக்கள்
அந்த 3-இல் இரு தோட்டாக்கள் அடிவயிற்று பகுதியையும், மற்றொரு தோட்டா மார்பு பகுதியையும் துளைத்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. எனினும் விரிவான அறிக்கை கிடைக்க 24 மணி நேரம் ஆகும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
4 வெற்று தோட்டாக்கள்
இதனிடையே கவுரி லங்கேஷ் கொலையை கண்டறிய அமைக்கப்பட்ட சிறப்பு தனிப்படை போலீஸார் 4 தோட்டாக்களை அவரது உடலுக்கு வெளியே கண்டெடுத்துள்ளனர். மொத்தம் 7 முறை சுடப்பட்டார் கவுரி. அதில் 3 குண்டுகள் மட்டுமே உடலுக்குள் போயுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.