கெஞ்சி கேக்கறேன்.. என்னை விசாரிங்க சார்.. ப்ளீஸ்.. கர்நாடக போலீஸை டென்ஷனாக்கிய ரவுடி!
பெங்களூரு: பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கர்நாடக ரவுடி, ஜாமினில் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் தனது பெற்றோருடன் போலீஸாரை அணுகி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் என்னை விசாரிக்க வேண்டும் என்று கூறி அடம் பிடித்ததால் போலீஸார் கடுப்பாகிப் போனார்கள்.
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் துப்புக் கிடைக்காமல் தவித்துக் கொண்டுள்ளனர் கர்நாடக போலீஸார். இதற்காக சிறப்பு படை அமைக்கப்பட்டு அவர்கள் மண்டையை உடைத்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் குனிகல் கிரி என்ற ரவுடி போலீஸாரை அணுகினார். அவருடன் அவரது பெற்றோரும் வந்திருந்தனர். போலீஸாரிடம் கிரி கூறுகையில், எனது பெயரும் இந்தக் கொலை வழக்கில் அடிபடுவதாக அறிந்தேன். எனவே நீங்கள் என்னை விசாரிக்க வசதியாக நானே வந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்டு குழப்பமடைந்த போலீஸார், "நோடப்பா... உன்னை எங்க லிஸ்ட்ல நாங்க இதுவரை வைக்கலே போய்ட்டு வா என்று கூறி அனுப்ப முயற்சித்தனர். ஆனால் கிரியோ போக மறுத்து விட்டு, அதெல்லாம் கிடையாது என்னை விசாரிச்சே ஆக வேண்டும் என்று கூறி அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டார். இதனால் போலீஸார் கடுப்பாகிப் போனார்கள்.
போறியா இல்லையா என்று அடிக்காத குறையாக அவரை பத்தி விட்டனர். கிரி மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. கைதாகி சிறையில் இருந்த அவர் வியாழக்கிழமைதான் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.