கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகன் நான் - கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை
டெல்லி: இந்திய கிரிக்கெட் ஜாம்பாவான்களான சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் தீவிர ரசிகன் நான் என கூகுள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
டெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில், கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை நேற்று மாணவர்களோடு சந்திப்பு நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், எனக்கு கிரிக்கெட்டும், கால்பந்தாட்டமும் பிடிக்கும். ஆனால் டி20 போட்டிகளைவிட ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளையே விரும்புகிறேன்.
பெரும்பாலான இந்தியர்களைப் போலவே சிறுவயதில், நானும் கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று கனவு கண்டேன். சுனில் காவஸ்கரின் ஆட்டத்தைப் பார்த்து அவரது ரசிகனானேன். அதன் பிறகு சச்சினின் ஆட்டம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்தான் சிறந்தது என்பது எனது கருத்து.
டெஸ்ட் கிரிக்கெட்டை பார்ப்பதற்கு எனக்கு அவகாசம் கிடைத்தது. நான் வளர்ந்து வந்த காலங்களில் டி-20 போட்டிகள் கிடையாது. இதனால், ஒருநாள், டெஸ்ட் போட்டிகளை போன்று டி-20 போட்டிகளை ரசிக்கும் வாய்ப்பு அமையவில்லை.
இதேபோல கால்பந்து விளையாட்டில் பார்சிலோனா அணிக்கும், லயோனல் மெஸ்ஸிக்கும் தீவிர ரசிகன் நான். எனது இளம் பருவத்தில் நள்ளிரவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை கண்டு ரசித்ததுண்டு.
கூகுள் சி.இ.ஓவாக பதவி வகிக்காவிட்டால் நான் சாப்ட்வேர் டெவலப் செய்யும் வேலையில்தான் இருந்திருப்பேன். உங்களை யார் உத்வேகப்படுத்துகிறார்களோ, அவர்களுடனேயே எப்போதும் கலந்திருங்கள் என்பதை மாணவர்களுக்கான அறிவுரையாக கூற விரும்புகிறேன் என்றார் சுந்தர் பிச்சை.