நாட்டிலேயே பெரிய தடுப்பு முகாம். 46 கோடி ஒதுக்கிய மோடி.. இல்லைன்னு எப்படி சொல்றாரு.. தருண் கோகாய்
குவஹாத்தி: நாட்டிலேயே பெரிய தடுப்பு காவல் முகாம் அமைக்க 46 கோடி ரூபாயை மோடி அரசு ஒதுக்கி உள்ளதாக அஸ்ஸாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தியாவில் அகதிகளுக்கான தடுப்பு முகாம் அமைக்கப்பட உள்ளதாக எதிர்க்கட்சிகள் சொல்வது முற்றிலும் பொய் என பிரதமர் மோடி மறுத்த நிலையில், தருண் கோகாயின் குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தருண் கோகாய் கூறுகையில், இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக சிறைத் தண்டனையை நிறைவு செய்த வெளிநாட்டினரை தங்க வைப்பதற்காக தடுப்பு முகாம்களைக் கட்டும் யோசனையை முதலில் கொண்டு வந்தது வாஜ்பாய் அரசாங்கம்தான்.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, நாட்டின் மிகப்பெரிய தடுப்பு மையத்தை நிர்மாணிக்க 46 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். 3,000 பேரை அடைத்து வைக்கும் திறன் கொண்டது. தடுப்புக் காவல் நிலையங்கள் இல்லை என்று பிரதமர் மோடி இப்போது எப்படி சொல்ல முடியும்? " என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் நாட்டிற்கு தடுப்புக்காவல் நிலையங்கள் தேவைப்பட்டாலும், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணுவதற்கு மதம் முக்கிய காரணமாக இருக்கக்கூடாது என்றார்.