ஜிடிபி 8.2% வளர்ந்துள்ளதாக குஷிபடுகிறார்களே.. உண்மையான பொருளாதார வளர்ச்சியா இது? ரியாலிட்டி இதுதான்
மும்பை: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான, அதாவது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 8.2 சதவீதம் வளர்ச்சியை அடைந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடும்போது உற்பத்தித்துறை 13.5 சதவீதம், விவசாய உற்பத்தி துறை 5.3% கட்டுமானத்துறை 8.7% வளர்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஜிடிபி 5.8 சதவீதமாக இருந்தது. எனவே இந்திய பொருளாதாரம் நாலுகால் பாய்ச்சலில் பாய தொடங்கியுள்ளது என்ற தோற்றம் பொதுவெளியில் ஏற்பட்டுள்ளது.
கொஞ்சம் குஷி
பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு மிகப்பெரிய தோல்வி என்பதை சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரம் உறுதி செய்தது. இந்த புள்ளி விவரம், மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான இந்த புள்ளிவிவரம், ஆளும் கட்சியினரை ஆசுவாசப்படுத்தி உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தப் புள்ளிவிவரத்தை கொண்டு அவர்கள் தீவிரமாக பிரச்சாரங்களிலும் ஈடுபடக்கூடும்.
உங்களுக்கு ஏதாவது தெரிகிறதா?
ஆனால், உண்மையிலேயே பொருளாதார வளர்ச்சி இந்த அளவுக்கு பெருகி உள்ளதா என்று, சாமானிய மக்களிடம் கேட்டால் நாங்கள் பார்த்த அளவில் அப்படி எந்த மாற்றமும் நிகழவில்லை என்கிறார்கள். ஆனால் புள்ளிவிபரத்தில் மட்டும் எப்படி இந்த மிகப்பெரிய வித்தியாசம் ஏற்பட்டது. இவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டிருந்தால் நாட்டில் வேலைவாய்ப்பு பெருகி இருக்கவேண்டுமே.. மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரித்து இருக்க வேண்டுமே.. இதெல்லாம் அபரிதமாக வளர்ந்து விட்டதா என்றால், சாமானியர்களின் பதில் இல்லை என்பது தான். அப்படி என்றால் இந்த புள்ளிவிவரம் எங்கிருந்து வந்தது? இதில்தான் அடங்கியுள்ளது சூட்சுமம். பொருளாதார வல்லுனர்களின் கருத்துக்களை சற்று உன்னிப்பாக கவனித்துப் பாருங்கள் அதன் சூட்சுமம் தெரியும்.
அடிப்படை மதிப்பு குறைவு
குறிப்பிட்ட காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சியை அளவிடுவதற்கு, அதற்கு முந்தைய காலகட்டத்தில் ஏற்பட்ட வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு அடிப்படை மதிப்பு (Base Value) என்ற ஒன்றை நிர்ணயிப்பது பொருளாதார புள்ளி விவர சேகரிப்பின் அடிப்படையாகும். இதன்படி கடந்த ஆண்டு அடிப்படை மதிப்பு என்பது 1.8 சதவீதமாக இருந்தது. இது மிகவும் குறைந்த அளவாகும். அதனோடு ஒப்பிடுவதால்தான், உற்பத்தித் துறை 13.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பது இப்போது நமக்கு பெரிய விஷயமாக தெரியும்.
ஜிஎஸ்டி குழப்பம்
கடந்த ஆண்டு அடிப்படை மதிப்பு குறைய என்ன காரணம்? ஏன் கடந்த ஆண்டு உற்பத்தித்துறை சுருங்கி இருந்தது தெரியுமா? அப்போதுதான் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முதல் முறையாக அமலுக்கு வர இருந்தது. ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வந்த காரணத்தினால் நிறுவனங்கள், அதன் பிறகு தங்கள் பொருளின் விலை உயருமா, குறையுமா, அல்லது அப்படியே நீடிக்குமா என்பது தெரியாமல் பெரும் குழப்பத்தில் தவித்து வந்தன. எனவே பல நிறுவனங்களும் இருந்த உற்பத்திப் பொருட்களை உடனடியாக விற்றுத் தீர்க்க குறைந்த விலைக்கு சந்தையில் தள்ளின. தங்கள் உற்பத்தியை வெகுவாகக் குறைந்தன. இது போன்ற காரணங்களால் உற்பத்தித் துறையில் பெரும் தேக்க நிலை காணப்பட்டது. ஆனால் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலுக்கு வந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் இப்பொழுது அது சார்ந்த தெளிவு கிடைத்து விட்டது.
வழக்கமான உற்பத்தி
இப்போது உற்பத்தித்துறை தனது வழக்கமான பாணியில் இயங்கி வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் மாருதி சுசுகி கார் உற்பத்தி நிறுவனம் 36 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் முந்தைய ஆண்டு விற்பனையை ஒப்பிடும்போது 54 சதவீத விற்பனை வளர்ச்சி பெற்றது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அவற்றின் விற்பனை ஜிஎஸ்டியால், சரிவடைந்தது தான் இந்த ஆண்டில் சதவீத மதிப்பு அதிகமாக இருப்பதற்கான காரணம் என்பது பொருளாதார அடிப்படை அறிந்தவர்களும் தெரிந்த விஷயம்.
விவசாய கடன்கள் தள்ளுபடி
மற்றொரு முக்கியமான விஷயம் விவசாயக் கடன்களை பல மாநிலங்களும், கடந்த 2017ஆம் ஆண்டு தள்ளுபடி செய்திருந்தன. அதில் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற பெரிய மாநிலங்களும் அடங்கும். இதன் பலனால் நடப்பாண்டு ஏப்ரல் ஜூன் மாதங்களில் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது. ரபி பருவத்தில் விவசாய உற்பத்தி அதிகரிக்க விவசாய கடன் தள்ளுபடி ஒரு காரணமாகும்.
பணமதிப்பிழப்புதான் காரணம்
மற்றொரு மிக முக்கியமான விஷயம், தனிநபர் வீட்டு செலவீனங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அதிகரித்துள்ளதுதான். கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 6.94சதவீதமாக இருந்த தனிநபர் விட்டு செலவீனங்கள், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 8.59 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மக்களின் வருமானம் மிக பெரிய அளவில் பெருகிவிட்டது அல்ல. சிறு அளவிலான வருமானப் பெருக்கம் உண்மைதான் எனினும், கடந்த நிதியாண்டில் பணமதிப்பிழப்பு தாக்கம் மக்கள் மத்தியில் மிக அதிகமாக இருந்தது. அவர்கள் கையில் பணமில்லை. செலவிட முடியாத சூழ்நிலையில் இருந்தனர். எனவே அதை ஒப்பிட்டால் இந்த வருடம் செலவீனம் அதிகரித்து தெரிகிறது. விஷயம் எவ்வளவு தான்.
வரும் காலம்
ஆனால் இந்த வளர்ச்சி விகிதம் என்பது அடுத்த காலாண்டிலும் இப்படியே இருக்குமா என்றால், அது மிகப் பெரிய சவாலான விஷயம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இதை சுட்டிக் காட்டுகிறார். கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை மதிப்பு மூலமாக இப்பொழுது பொருளாதாரம் வளர்ந்தது போன்ற தோற்றத்தை புள்ளிவிவரம் தருகிறது. ஆனால் வரும் காலத்தில் இதே நிலை நீடிக்காது என்கிறார் அவர். இதற்கு காரணம், அக்டோபர் முதலான அடுத்த காலாண்டில் கடந்த ஆண்டின் அதே காலகட்டத்திலான, அடிப்படை மதிப்புதான் ஒப்பிடப்படும். அக்டோபர் முதலான முந்தைய காலாண்டில், வளர்ச்சி அதிகரிக்க துவங்கியிருந்தது. எனவே வரும் அக்டோபருக்கு பிந்தைய காலாண்டில் இப்போதுள்ள வளர்ச்சியைக் காட்ட முடியாது.
சவால்கள்
மேலும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, வட்டி விகிதம் அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து விட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அடுத்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் என்பது குறையவே செய்யும் என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள். இப்போது, ஓரளவுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தாலும் கூட, புள்ளிவிவரத்தில் கூறப்படுவது என்னவோ, ஊதி பெரிதாக்கப்பட்ட ஒரு பலூன். இது அடுத்த காலாண்டு வரை நீடிக்காது, என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாகும். இதையும் மீறி பொருளாதாரத்தை அடுத்த காலாண்டில் சரி செய்தால் மத்திய அரசுக்கு சபாஷ் போடலாம்.