ராணுவம் வெளியேற பேரணி.. காஷ்மீர் பிரிவினைவாதி கிலானி 'முறைப்படி' கைது
டெல்லி: காஷ்மீர் பிரிவினைவாதி சையது அலி ஷா கிலானி கைது செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் இருந்து ராணுவத்தை வெளியேற கூறி பேரணி நடத்தியதை தொடர்ந்து அவர் 'முறைப்படி' கைது செய்யப்பட்டார்.
காஷ்மீரில் வன்முறை வெடித்துள்ள நிலையில், பிரிவினைவாதி கிலானி கடந்த 2 நாட்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இருப்பினும், தடையை மீறி, தலைநகர், ஸ்ரீநகரிலுள்ள பதாமி பாக், ராணுவ முகாமை நோக்கி நேற்று பேரணி சென்றார், கிலானி. இந்திய ராணுவத்தை காஷ்மீரை விட்டு வெளியேற அவர் கோரிக்கைவிடுத்தார்.
முன்னதாக ராணுவத்தை வெளியேற கோரி, இவர் திறந்த மடல் எழுதியிருந்தார். இந்த கடிதத்தை இந்திய ராணுவம், ஆயுதப்படை, கடற்படை, எல்லையோர பாதுகாப்பு படை, சிஆர்பிஎஸ், ஐடிபிபி மற்றும் சிஐஎஸ்எப் ஆகியவற்றுக்கு அனுப்பிவிடுங்கள் எனவும் அவர் கூறியிருந்தார்.
கிலானி பேரணியால் ஸ்ரீநகரில் நேற்று பதற்றம் நிலவியது. சாலைகள் அடைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.