தேச துரோக வழக்கில் கைதான பேராசிரியர் கிலானிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்
டெல்லி: தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜே.என்.யூ)வில் கடந்த 9-ந் தேதியன்று அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளை வீரவணக்க நாளாக மாணவர்கள் அனுசரித்தனர். இந்நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக இந்துத்துவா அமைப்புகள் புகார் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து டெல்லி ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தலைவர் கன்யாகுமார் தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சலசலப்பை உண்டாக்கியது.
இதனிடையே டெல்லியில் கடந்த 10-ந் தேதி செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இந்த செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததாக டெல்லி பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் கிலானி கைது செய்யப்பட்டார். அவர் மீது தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பாட்டியாலா வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் கிலானியை ஆஜர்படுத்துவதாக இருந்தது. நேற்று அங்கு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததையடுத்து டெல்லி சாணக்கியபுரி, பாதுகாப்புப் படை அலுவலகத்தில் மேஜிஸ்ட்ரேட் முன் கிலானியை போலீசார் ரகசியமாக ஆஜர் படுத்தினர்.
இதையடுத்து கிலானியை திகார் சிறையில் பாதுகாப்பான அறையில் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். கிலானி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை விசாரணைக்கு வருகிறது.