அப்சல் குரு ஆதரவு கோஷம்.. டெல்லி பல்கலை. முன்னாள் பேராசிரியருக்கு 2 நாள் போலீஸ் காவல்
டெல்லி: தீவிரவாதி அப்சல் குருவிற்கு ஆதரவாக சிலர் கோஷமிட்ட சம்பவம் தொடர்பாக, கோஷம் இடம்பெற்றதற்கு காரணமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கீலானியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். அவருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி பிரஸ் கிளப்பில் கடந்த 10ம் தேதி கீலானி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரை தவிர மேலும் 3 பேச்சாளர்களும் மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போதுதான், கூட்டத்தில் இருந்த ஒருசில விஷமிகள், அப்சல் குருவிற்கு ஆதரவாக கோஷமிட்டனர்.
தகவலறிந்த போலீசார், கீலானி மற்றும் பெயர் தெரியாத விஷமிகள் மீது 12ம் தேதி வழக்கு பதிவு செய்தது. கீலானி அந்த நிகழ்ச்சியின் முக்கிய அமைப்பாளர் என்பதால் அவரிடம் நேற்றிரவு காவல்துறை விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில், அவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிந்ததால், கைது செய்தது காவல்துறை.
இதையடுத்து கீலானி இன்று கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.