15 ஆண்டு "பிரிவினை"க்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து திரும்பும் கீதா.... நாளை இந்தியா வருகிறார்!
டெல்லி: கடந்த 15 வருடங்களாக தனது குடும்பத்தையும், நாட்டையும் பிரிந்து பாகிஸ்தானில் வசித்து வந்த இளம் பெண் கீதா நாளை இந்தியா திரும்புகிறார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்ற சம்ஜவுதா ரயிலில் எட்டு வயது சிறுமியாக மீட்கப்பட்டார் கீதா. வாய் பேச முடியாத, காதும் கேட்கும் திறன் அற்ற அச்சிறுமியிடம் இருந்து அவரது பெற்றோர் குறித்து ராணுவத்தினரால் எந்தத் தகவலும் பெற இயலவில்லை.
இதனால் பாகிஸ்தான் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார் கீதா. அதன்பின் அங்குள்ள எதி தொண்டு நிறுவனத்திடம் சேர்ந்தார். அங்கேயே வளர்ந்தார் கீதா.
வெளிச்சத்திற்கு வந்த கீதா...
இந்நிலையில் மோடி பிரதமராக பதவியேற்றதும் பெற்றோரைப் பிரிந்த நேபாளச் சிறுவனை மீண்டும் அவரது பெற்றோரிடம் சேர்த்தார். இந்த விஷயம் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து கீதா குறித்த தகவல்களும் வெளிச்சத்திற்கு வந்தது.
உறுதி...
பாகிஸ்தான் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அங்கு வைத்து கீதாவை சந்தித்து, பெற்றோரிடம் சேர்த்து வைப்பதாக உறுதி அளித்தார். அதன்பின், இதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.
பீகாரில் பெற்றோர்...
அதன் பலனாக, கீதாவின் பெற்றோர் பீகார் மாநிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து சேகரித்த புகைப்படங்கள் பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியத் தூதர் ராகவனும் அவரது மனைவியும், புகைப்படங்களுடன் கீதாவைச் சந்தித்தனர்.
அடையாளம்...
போட்டோவில் இருந்த தனது தந்தை, சித்தி மற்றும் பலரை கீதா அப்போது அடையாளம் காட்டினார். அதனைத் தொடர்ந்து கீதாவை இந்தியா அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன.
இந்தியா திரும்புகிறார்...
இந்நிலையில், நாளை கீதா இந்தியா திரும்ப உள்ளார். இதனை வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் உறுதி செய்துள்ளார். கீதாவுடன் அவர் தங்கியிருந்த தொண்டு அமைப்பு ஒன்றை சேர்ந்த 5 பேரும் இந்தியா வர உள்ளனர்.
மரபணு சோதனை...
இந்தியா வரும் கீதாவிற்கு மரபணு பரிசோதனை நடத்தப்படும். அதன் அடிப்படையில் அவரது பெற்றோருடன் அவர் சேர்த்து வைக்கப்படுவார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுவரை கீதா இந்தூரில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றில் தங்க வைக்கப்படுவார்.
நம்பிக்கை...
‘நான் எனது குடும்பத்தினரை அடையாளம் கண்டுள்ளேன். ஆனால், அவர்கள் தான் என் குடும்பத்தினர் என என்னால் 100 சதவீதம் உறுதியாகக் கூற இயலவில்லை. ஆனால், அவர்களை நிச்சயம் அடையாளம் காண்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், எனது வீடு கிளீனிக் ஒன்றில் அருகில் இருந்தது இன்னமும் எனக்கு ஞாபகத்தில் உள்ளது' என வாய் பேச முடியாத, காது கேட்கும் திறன் அற்ற கீதா சைகைகள் மூலம் தெரிவித்துள்ளார்.