சைகை மொழியில் முதல் முறையாக 'ஜன கன மன' பாடிய கீதா
இந்தூர்: பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பியுள்ள கீதா சைகை மொழியில் இந்திய தேசிய கீதத்தை பாடியுள்ளார்.
8 வயது இருக்கையில் வழிதவறி பாகிஸ்தான் சென்ற கீதா 15 ஆண்டுகள் கழித்து கடந்த திங்கட்கிழமை நாடு திரும்பினார். டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்தார்.
கீதா தற்போது மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கான மையத்தை நடத்தும் என்.ஜி.ஓ.வின் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் அவர் இந்திய தேசிய கீதத்தை சைகை மொழியில் செய்து காட்டியுள்ளார்.
இது குறித்து மையத்தின் தலைவர் மோனிகா பஞ்சாபி கூறுகையில்,
மையத்தில் உள்ள பிற மாணவ, மாணவியருடன் சேர்ந்து கீதா நம் தேசிய கீதத்தை சைகை மொழியில் செய்து காட்டினார். அவர் முதல்முறையாக நம் தேசிய கீத்தை சைகை செய்துள்ளார்.
கீதா இந்த சூழலில் செட்டில் ஆன பிறகு அவருக்கு கல்வி, தொழிற் பயிற்சி அளிக்கப்படும். பார்சிலோனாவில் இருந்து வந்துள்ள மனோதத்துவ நிபுணர் ஆலிசியா லீல் தற்போது எங்கள் மையத்தில் உள்ளார். கீதாவுக்கு உதவுமாறு அவரிடம் கேட்கப்படும் என்றார்.