பெற்றோரை அடையாளம் காண முடியாமல் திணறிய கீதா: மரபணு சோதனை முடிவுக்காக காத்திருப்பு
டெல்லி: பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பியுள்ள கீதாவின் மரபணு சோதனை முடிவு வரும் வரை காத்திருப்போம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த கீதா 8 வயது இருக்கையில் வழிதவறி பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டார். வாய் பேச முடியாத, காது கேளாத அவர் 15 ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்தார். இந்நிலையில் பீகாரில் வசிக்கும் தனது பெற்றோரை அவர் அடையாளம் கண்ட பிறகு திங்கட்கிழமை நாடு திரும்பினார்.
விமான நிலையத்தில் அவரை வரவேற்க காத்திருந்த அவரின் குடும்பத்தாரை அவரால் அடையாளம் காண முடியவில்லை. இதையடுத்து அவர் அவர்களை சந்திக்காமலேயே சென்றுவிட்டார். குடும்பத்தாரை அடையாளம் காண முடியாததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கீதாவுக்கு மரபணு சோதனை நடத்தினர்.
முன்னதாக அவரின் தந்தை என்று கூறும் ஜனார்தன் மஹதோ உள்ளிட்ட குடும்பத்தாருக்கு கடந்த 24ம் தேதி மரபணு சோதனை நடத்தப்பட்டது. மரபணு சோதனை முடிவுகள் வர 15 முதல் 20 நாட்கள் ஆகும்.
சோதனை முடிவுகள் வரும் வரை காத்திருப்போம் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். மரபணு சோதனையில் கீதா என் மகள் தான் என்பது உறுதியாகிவிடும் என ஜனார்தன் மஹதோ தெரிவித்துள்ளார்.
கீதாவின் நிஜப் பெயர் ஹீரா என்றும், அவர் வழிதவறிச் செல்லும் முன்பு அவருக்கு திருமணமாகி அவரின் கணவருடன் வசித்து வந்ததாகவும் அவரின் அண்ணன் மனோஜ் கூறியுள்ளார்.