புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி எம்.என்.நரவனே? ஓய்வு பெற்ற விமான படை தளபதி பதவியா?
டெல்லி: நாட்டின் புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி ஜெனரல் எம்.என். நரவனே அல்லது ஓய்வு பெற்ற விமானப் படை தளபதி பதவுரியா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முப்படைகளின் முதலாவது புதிய தலைமை தளபதி பிபின் ராவத், தமிழகத்தின் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். பிபின் ராவத் உட்பட 13 ராணுவ அதிகாரிகள் இவ்விபத்தில் உயிரிழந்தனர். இதனையடுத்து அடுத்த முப்படைகளின் தலைமை தளபதி குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
27-வது ராணுவ தளபதியாக 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ல் பதவியேற்றார் ஜெனரல் பிபின் ராவத். பணி ஓய்வுக்குப் பின் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத் பொறுப்பேற்றார். முப்படைகளின் தலைமை தளபதி பதவியில் இருந்து பிபின் ராவத் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற இருந்தார்.
ராணுவத்தின் 28வது தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே பொறுப்பேற்றார்- சென்னை பல்கலை.யில் படித்தவர்!
முப்படை தலைமை தளபதியின் பொறுப்புகள்
முப்படைகளின் தலைமை தளபதி பொறுப்புடன், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் Department of Military Affairs என்கிற ராணுவ விவகாரங்களுக்கான துறையின் செயலாளராகவும் அவர் பதவி வகிப்பார். Chairman Chiefs of Staff Committee-ன் நிரந்தர தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை ஆலோசகர் ஆகிய பொறுப்புகளும் முப்படை தலைமை தளபதிக்கு உள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து Department of Military Affairs என்பது அவருக்கு கீழ் கொண்டுவரப்பட்டது.
முப்படைகளின் துணை தலைமை தளபதி?
அதே நேரத்தில் முப்படைகளையும் ஒருங்கிணைந்து செயல்படக் கூடியவராக முப்படைகளின் தலைமை தளபதி திகழ்ந்தார். முப்படைகளின் தலைமை தளபதி என்ற பதவிதான் உருவாக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் துணை தளபதி என்ற பதவி உருவாக்கப்படவில்லை. அப்படி உருவாக்கப்பட்டிருந்தால் இயல்பாகவே புதிய முப்படைகளின் தலைமை தளபதிக்கு அப்பதவியில் இருப்பவரே நியமிக்கப்படுவார். உதாரணமாக ராணுவம், விமானப் படை, கப்பற்படை ஆகியவற்றின் தளபதிகள் இல்லாத சூழலில் புதிய தளபதி நியமிக்கப்படும் வரை துணைத் தளபதி அந்த பொறுப்பை வகிப்பது மரபு. அதுபோன்ற சூழ்நிலை தற்போது முப்படைகளின் தலைமை தளபதி விவகாரத்தில் இல்லை.
அடுத்தது யார்?
முப்படைகளின் தலைமை தளபதி என்பவர் ராணுவ அதிகாரி. அதே நேரத்தில் அதிகாரிகளைப் போன்ற செயலாளர் பதவியும் வகிப்பவர். ஆகையால் உடனடியாக புதிய முப்படை தலைமை தளபதி யார் என்பதில் தெளிவற்ற நிலை உள்ளது. இத்தகைய நியமனங்கள் மத்திய அரசால் அதாவது அரசியல் தலைமையால் நியமனம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள், ராணுவத்தில் பணியில் இருப்பவர்தான் என்று இல்லை..ராணுவம் தொடர்பான விவகாரங்களை கவனித்து வரும் செயலாளர் நிலையிலான அதிகாரி கூட இந்த பொறுப்புக்கு நியமிக்கப்படலாம் என்கிற கருத்தையும் முன்வைக்கின்றனர். அதாவது ராணுவத்தில் பணியாற்றும் மூத்த தளபதிகளில் ஒருவரா? அல்லது ராணுவ விவகாரங்களுக்கான பொறுப்பான அதிகாரி ஒருவரா? யார் புதிய முப்படைகளின் தலைமை தளபதி என்கிற கேள்வி எழுவதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அரசு நிலை
பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிபின் ராவத் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் புதிய முப்படைகளின் தலைமை தளபதி யார் என்பது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என்கின்றன டெல்லி தகவல்கள். அதேநேரத்தில் நாட்டின் அதிமுக்கியமான முப்படைகளின் தலைமை தளபதி பதவி நியமனத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்தவும் விரும்பாது என்றும் கூறப்படுகிறது. அனேகமாக ஒருவார காலத்துக்குள் இந்த புதிய நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
புதிய முப்படைகளின் தலைமை தளபதி நரவனே?
விமானப் படை தளபதியான வி.ஆர். சவுதாரி கடந்த செப்டம்பர் 30-ந் தேதி பொறுப்பேற்றார். கடற்படை தளபதி ஹரிகுமார் கடந்த நவம்பர் 30-ல்தான் பொறுப்பேற்றார். அதேநேரத்தில் ராணுவ தளபதி நரவனே, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வு பெற உள்ளார். முப்படைகளின் தலைமை தளபதி பதவியில் இருப்பவர் 65 வயது வரை அப்பதவியில் நீடிக்கலாம். இதனால் தற்போதைய நிலையில் முப்படைகளின் தளபதிகளில் சீனியராக எம்.என்.நரவனே உள்ளார். இதனிடையே ராணுவ துணை தளபதி சாண்டி பிரசாத் தமது கத்தார் பயணத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு நாடு திரும்புகிறார். அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு நாடு திரும்புவதும் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அதாவது தற்போதைய நிலையில் ராணுவ தளபதியான நரவனே, முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்படலாம் என்பதையே இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன என்கின்ற பாதுகாப்புத் துறை வட்டாரங்கள்.
ராணுவ தளபதி நரவனே பின்னணி
2019-ம் ஆண்டு டிசம்பர் 31-ல் நாட்டின் 27-வது ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார் நரவனே. முன்னதாக ராணுவ துணை தளபதியாக பதவி வகித்தார். சீனாவுடனான 4,000 கி.மீ எல்லை பகிர்வு உள்ள கிழக்கு பிராந்திய தளபதியாகவும் பணிபுரிந்தார் நரவனே. ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதிகளை ஒழித்து கட்டுவதில் முனைப்புடன் பணியாற்றியவர் நரவனே. இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப் படையில் இடம்பெற்றிருந்தார். சென்னை பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு தொடர்பாக முதுகலை பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Recommended Video
ஓய்வு பெற்ற ஆர்.கே.எஸ் பதவுரியா?
இதனிடையே விமானப் படை தளபதியாக பணியாற்றி கடந்த செப்டம்பர் 30-ல் ஓய்வு பெற்ற ஆர்.கே.எஸ். பதவுரியா பெயரும் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்படலாம் என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. 1980-ல் விமானப் படையில் சேர்ந்த பதவுரியா, 42 ஆண்டுகள் சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்றார். ரஃபேல் போர் விமானங்கள், தேஜஸ் போர் விமானங்கள் கொள்முதலில் முக்கிய பங்கு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.