தேர்தல் களத்தில் விளையாட்டு வீரர்கள்: அசார், கைப், பூட்டியா, ரத்தோர் யாருக்கு வெற்றி?
டெல்லி: விளையாட்டு வீரர்கள் அரசியலுக்கு வருவதும் தேர்தலில் போட்டியிடுவதும் புதிய விஷயம் இல்லைதான். ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த மக்களவைத் தேர்தலில் கால்பந்து கேப்டன், கிரிக்கெட் கேப்டன், ஹாக்கி கேப்டன், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் என பிரபல விளையாட்டு வீரர்கள் பலர் களமிறங்கினர்.
பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர்களில் முகமது அசாருதீன் மற்றும் முகமது கயீஃப் ஆகியோர் தோல்வியை தழுவினர்.
காங்கிரஸ் வேட்பாளர் அசாருதீன்
கடந்த முறை உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அசாருதீன், இந்த முறை ராஜஸ்தானின் டோங் சவாய் மாதோபூர் தொகுதி வேட்பாளராகியுள்ளார்.
தோல்வியை தழுவிய அசார்
பாஜக-வின் சுக்பிர் சிங் ஜானபுரியாவை எதிர்த்து போட்டியிட்ட அசாரூதினுக்கு அவருக்கு 4 லட்சம் வாக்குகள் கிடைத்தன. ஆனாலும் தோல்வியையே தழுவினார். இவரை விடவும் அதிக வாக்குகளைப் பெற்றார் சுக்பிர்சிங் ஜானபுரியா.
4 இடம் பிடித்த கய்ஃப்
கிரிக்கெட் வீரர் முகமது கைப். தனது அபார பீல்டிங் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்த ஆல் ரவுண்டர். இப்போதும் உத்தரப் பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். இவர் காங்கிரஸ் சார்பில் உ.பியின் புல்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவருக்கு ஒரு லட்சத்திற்கும் குறைவான வாக்குளை மட்டுமே பெறமுடிந்தது. 4 இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
கீர்த்தி ஆசாத் வெற்றி
1983ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றி அணியில் இடம்பெற்றிருந்த, பாஜக வேட்பாளர் கீர்த்தி ஆசாத், பீகாரின் தார்பங்கா தொகுதியிலிருந்து தொடர்ந்து 3வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாய்சுங் பூட்டியா
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாய்சுங் பூட்டியா திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்
தோல்வியடைந்த பூட்டியா
அர்ஜுனா, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள பூட்டியா கால்பந்து விளையாடிய காலத்தில் கோலடிக்க கிடைத்த வாய்ப்புகளை பெரும்பாலும் தவற விட்டதே இல்லை. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த தேர்தலில் அவரால் வெற்றியை ருசிக்க முடியவில்லை.
வெற்றியை சுட்ட ரத்தோர்
இந்த தேர்தலில் பெரிதும் கவனத்தை ஈர்த்த மற்றொரு விளையாட்டு வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர். 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சூடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பெயரை சர்வதேச அளவில் நிலை நாட்டியவர்.
இத்தேர்தலில் ரத்தோர் பாஜக சார்பில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ஊரக தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் அவர் வைத்த குறி தப்பவில்லை. மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார்.
திலீப் திர்கே
இப்போது ராஜ்யசபா உறுப்பினராக உள்ள முன்னாள் ஹாக்கி கேப்டன் திலீப் திர்கே, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் சார்பில் சுந்தர்கர் தொகுதியில் போட்டியிட்டார்.
தோல்வியை தழுவினார்
இவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஓராம், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் ஹேமநாத பிஸ்வால் ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தல்களம் திர்கேவுக்கு சவால் நிறைந்ததாகவே இருந்தது. கடைசியில் அவருக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது.