ஊடக விபச்சாரிகள்... சர்ச்சை டுவிட்டுக்கு வருத்தம் தெரிவித்தார் ராணுவ அமைச்சர் வி.கே.சிங்!
டெல்லி: ஊடகங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் வி.கே.சிங்.
அடிக்கடி ஏதாவது கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது மத்திய அமைச்சர் வி.கே சிங்கின் வழக்கம். அந்தவகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் தேசிய தின கொண்டாட்டத்தின் போது தூதரக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வி.கே.சிங் கலந்து கொண்டார்.
பின்னர் அது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வி.கே.சிங் கருத்து வெளியிட்டிருந்தார். அதில், ‘கடமைக்காகத்தான் இதில் கலந்து கொண்டேன். மற்றபடி அருவெறுப்பாக உணர்கிறேன்' என அவர் கூறியிருந்தார். மத்திய அமைச்சராக இருந்து கொண்டு அவர் இவ்வாறு அவர் கூறியது சர்ச்சையை உண்டாக்கியது. இது தொடர்பாக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து செய்திகள் வெளியானது.
தன்னைப் பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து வி.கே.சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த ஊடக விபச்சாரிகளிடம் இருந்து நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்' என்று சாடியிருந்தார். இதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஊடகங்கள் பற்றி சர்ச்சைக்குரிய வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் வி.கே.சிங். ‘90 சதவீத ஊடகங்கள் தங்கள் கடமையைச் சரியாகவே செய்து வருவதாகவும், தான் அத்தகையவர்களைப் பற்றி அவ்வாறு விமர்சிக்கவில்லை' என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.