நார்த் இந்தியன்லாம் வெளியே போ.. குஜராத்தில் தாக்கப்படும் உ.பி, பீகாரிகள்.. என்ன காரணம்?
குஜராத்தில் இருந்து உத்தர பிரதேச மற்றும் பீகார் மக்கள் 1 லட்சம் பேர் இதுவரை வெளியேறி இருக்கிறார்கள்.
Recommended Video
காந்திநகர்: குஜராத்தில் இருந்து உத்தர பிரதேச மற்றும் பீகார் மக்கள் 1 லட்சம் பேர் இதுவரை வெளியேறி இருக்கிறார்கள்.
பீகார் மற்றும் உத்தர பிரதேச மக்கள் மீது குஜராத்திகள் நடத்திய தொடர் தாக்குதல் காரணமாக இப்படி எல்லோரும் வெளியேறி வருகிறார்கள். இது மூன்று மாநில அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
ஒரு பாலியல் வன்புணர்வுதான் இதற்கு காரணம் ஆகும். குஜராத்தில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட காரணத்தால் இந்த சம்பவம் நடக்கிறது.
வன்புணர்வு
குஜராத்தின் சபார்காந்தா மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இவரை வன்புணர்வு செய்தது, பீகாரை சேர்ந்த இளைஞன் ஒருவன். தற்போது அந்த சிறுமி தொடர் சிகிச்சையை அடுத்து நல்ல உடல்நிலையில் இருக்கிறார். அந்த பீகார் நபரும் கைது செய்யப்பட்டுவிட்டார். ஆனால் இதுதான் இந்த கலவரத்தை உண்டாக்கி உள்ளது.
தாக்குதல் நடத்தி வருகிறார்கள்
இதையடுத்து குஜராத்திகள், இனி குஜராத்தில் பீகாரிகள், உ.பிக்கள் வசிக்க கூடாது , மீறி வசித்தால் தாக்குதல் நடத்தப்படும் என்றனர். அதை தொடர்ந்து பீகாரிகள் மற்றும் உத்தர பிரதேச பணியாளர்கள் மீது குஜராத்திகள் மோசமாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இவர்கள் இந்த ஊரைவிட்டு கண்டிப்பாக வெளியேற வேண்டும் என்று கூறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். போலீஸ் தாக்குபவர்களை பிடிக்க முடியாமல் கஷ்டபட்டு வருகிறது.
10 நாட்கள் ஆகியும் சரியாகவில்லை
இதில் சோகம் என்னவென்றால் தொடர்ந்து 10 நாட்களாக இந்த சம்பவம் நீடித்து வருகிறது. என்ன செய்தும் போலீஸ் இவர்களை கைது செய்ய முடியவில்லை. தொடர்ந்து 10 நாட்களாக பீகாரிகள், உத்தர பிரதேச மக்கள் குஜராத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள். பல வருடமாக அங்கே இருப்பவர்களும் கூட வெளியேறி வருகிறார்கள்.
நார்த் இந்தியன்கள்
மேலும் ''நார்த் இந்தியர்கள் குஜராத்தை விட்டு வெளியே போ'' என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை வைத்து ஆங்காங்கே பேரணி நடத்தி வருகிறார்கள். குஜராத்தை பொறுத்த வரை உத்தர பிரதேச, பீகார் பகுதி மக்கள் எல்லோரும் வடஇந்தியர்கள். அதனால் அந்த வாசகம் பொருந்திய பதாகைகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
கடும் நெரிசல்
குஜராத்தில் இருந்து வெளியேறும் அனைத்து பேருந்துகளும், ரயில்களும் இதனால் நிரம்பி இருக்கிறது. எப்படியாவது குஜராத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர்கள் செல்வதாக கூறப்படுகிறது. இதுவரை 1 லட்சம் பேர் இப்படி வெளியேறி இருப்பதாக குஜராத் போலீஸ் தெரிவிக்கிறது.