வன்புணர்வுக்கு எதிராக தொடரும் போராட்டம்... மரணத்திற்கும் பின்னும் மக்கள் மனதில் வாழும் சிறுமி
காஷ்மீர் சிறுமி மரணமடைந்தும் பல சம்பவங்களில் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.
Recommended Video
காசியாபாத்: மரணத்துக்கு பின்னும் பல்வேறு சம்பவங்களில் காஷ்மீர் சிறுமி நம்மிடையே வாழ்ந்து வருகிறார் என்பது பல சம்பவங்களில் நிரூபணமாகி வருகிறது. கண்டனங்கள், எதிர்ப்புகள், போராட்டங்கள், என பல ரூபங்களில் சிறுமி நம் கண்முன்னே நிழலாடி கிடந்தாலும், சில நிகழ்வுகள் நம்மை நெகிழ செய்கின்றன என்பதை மறுக்க முடியவில்லை.
காஷ்மீர் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. கேரள பத்திரிகையாளா் ஒருவர் தனது 2 மாத குழந்தைக்கு சூட்டி சமூக வலைதளங்களில் பலரது வரவேற்பை பெற்றார். ஆனால், இளைஞர் ஒருவரோ, ஆசிபாவின் கொலையை நியாயப்படுத்தி பேஸ்புக்கில் கருத்தை பதிவு செய்து வாங்கிக்கட்டிக் கொண்ட கதையும் நடந்திருக்கிறது.
காஷ்மீர் சிறுமியின் மரணத்தின் கொடூரம் காசியாபாத்தில் உள்ள குற்றவாளி ஒருவன் பிடிபட காரணமாக இருந்திருக்கிறது. 7ஆம் வகுப்பு படிக்கும் 11-வயது சிறுவன் அவன். கத்துவா சிறுமியின் பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோ ஒன்றினை வாட்ஸ்அப்பில் தனது பெற்றோருடன் சேர்ந்து பார்த்திருக்கிறான். பார்த்த சிறிது நேரத்திற்கெல்லாம் முகம் வெளிறி, அலறியபடி கத்திக்கெண்டே அறையை விட்டு ஓடி வந்தான்.
இதைக்கண்டு பதறிபோன பெற்றோர், அவனை சமாதானப்படுத்தி என்ன, ஏது என விசாரித்தனர். அதற்கு, அந்த வீட்டில் வாடகைக்கு தங்கியிருக்கும் ஒருவரும் தன்னிடம் இதேபோன்று தகாத முறையில் நடந்துகொண்டதாக கூறி, சிறுவன் தேம்பி தேம்பி அழுதானாம். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுவன் குற்றஞ்சாட்டிய அந்த நபரைக் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க, அடுத்த 24 மணிநேரத்தில் அந்த நபரை அவர்கள் கைது செய்தனர்.
முதிர்ச்சியும் மனிதாபிமானமும் இல்லாத யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை காஷ்மீர் சிறுமியின் மரணம் மூலம் நமக்கு தெரியவருகிறது. கேரள மாநிலம் கொச்சியில் கோடக் மஹிந்திரா வங்கியின் துணை மேலாளராக பணிபுரிந்து வந்தவர் விஷ்ணு நந்தகுமார். இவர் தனது முகநூலில் 'நல்ல வேளையாக இந்தச் சிறுமி 8 வயதிலேயே கொல்லப்பட்டுவிட்டார், இல்லையென்றால் இவள் வளர்ந்து இந்தியா மீது வெடிகுண்டு வீசுவார் என்று குறிப்பிட்டிருந்தார்.'
அவ்வளவுதான். பேஸ்புக் பக்கத்தை பேஸ்புக் பதிவீட்டாளர்கள் வெளுத்து வாங்க ஆரம்பித்துவிட்டனர். விஷ்ணுவை உடனடியாக பணிநீக்கம் செய்யாவிட்டால், தங்களது வங்கியிலுள்ள எங்கள் அனைத்து கணக்குகளையும் மூடிவிடுவோம் என்று கொந்தளித்தனர். அதேநேரத்தில் வங்கியின் அதிகாரபூர்வ பேஸ்புக் அதிருப்தி அளிப்பதாக கூறி ஏராளமானோர் குறைத்து மதிப்பீடுகளை வழங்க தொடங்கினர்.
ட்விட்டரிலும் உங்கள் வங்கிமேலாளரை (#Dismiss_your_manager)பணிநீக்கம் செய்யுங்கள் என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டானது. இதனால் பதறிப்போன வங்கி நிர்வாகம் விஷ்ணுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டதாம். தங்களுக்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுத்த வங்கிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
அதேபோல, கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் "எங்கள் வீடுகளில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், பாஜகவினர் வாக்கு கேட்டு வீட்டுக்குள் வராதீர்கள்" போஸ்டர் ஒட்டியிருக்கிறார்களாம். திருவனந்தபுரம், புலியூர், செங்கனூர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் ஒட்டப்பட்ட போஸ்டர் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, ஆலப்புழா மாவட்டம், செங்கனூர், சேர்தாலா வரை பரவிவிட்டது.
ஆனால் செங்கனூரில் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்து வருவதால், இந்த போஸ்டரை கண்டு பாஜகவினருக்கு மண்டை காய்ந்து விட்டதாம். இவ்வாறான போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தால் தங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துமே என்று காவல்துறையினரிடம் பாஜகவினர் புகார் தெரிவித்தார்களாம். ஆனால் காவல்துறையினரோ அதை காதிலே போட்டுக் கொள்ளவும் இல்லையாம், நடவடிக்கை எடுக்கவும் மறுத்துவிட்டதாம்.
ஈரமான இதயம் படைத்த ஒவ்வொரு தாய்-தந்தையரும் காஷ்மீர் சிறுமியை தங்களது மகளாகவும், அனைத்து இளைஞர்களுக்கும் அவளை சகோதரியாகவும் பாவிக்க துவங்கிவிட்டனர். அதனால்தான் மக்கள் தங்களது ஆற்றாமையை பலவடிவங்களில் வெளிப்படுத்தி பாலியல் வன்புணர்வுகளுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க துவங்கிவிட்டார்கள். இதுவே அந்த சிறுமிக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.