உ.பி.யில் 8 வயது சிறுமி பலாத்காரம்.. 24 வயது இளைஞரை அடித்துக் கொன்ற பெற்றோர், பொதுமக்கள்!
உத்தரப்பிரதேசத்தில் சிறுமியைப் பலாத்காரம் செய்த இளைஞரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்தனர்.
காஜியாபாத்: உத்தரப்பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் காஜியாபாத்தில் உள்ள லொனி பகுதியைச் சேர்ந்தவர் ஜிதேந்திரா (24). இவர் அதே பகுதியில் உள்ள 8 வயது சிறுமியை, கடந்த வெள்ளியன்று கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும், இது தொடர்பாக வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் அச்சிறுமியை அவர் மிரட்டியுள்ளார்.
ஆனால், சனிக்கிழமை காலை ஜிதேந்திராவிடம் இருந்து தப்பி வந்த சிறுமி, தனக்கு நடந்த கொடுமை தொடர்பாக தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களுடன் சென்று, ஜிதேந்திராவை தாக்கியுள்ளனர்.
மரத்தில் கட்டி வைக்கப்பட்டு ஜிதேந்திரா கடுமையாக தாக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த ஜிதேந்திராவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜிதேந்திரா ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஜிதேந்திரா கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரைக் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞரை உறவினர்கள் மற்றும் பொதுமக்களே சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.